மலர்தூவி... ஆரத்தி எடுத்து அமர்கள வரவேற்போடு பிரச்சாரம் செய்யும் கோகுல இந்திரா
சென்னை: அம்மாதான் இப்பவும் எப்பவும் முதல்வர்.... 234 தொகுதிகளிலும் அதிமுக ஜெயிக்கும் என்று நம்பிக்கையோடு வாக்க சேகரித்து வருகிறார் அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் கோகுல இந்திரா.
சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் 13 தினங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்னும் ஒருவாரத்தில் முடிந்து விடும் என்பதால் அக்னி நட்சத்திர வெயிலை விட அனல் பறக்கிறது பிரச்சாரம்.
அமைச்சரும் அண்ணாநகர் தொகுதி வேட்பாளருமான கோகுல இந்திரா வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் சமுதாய நலக்கூடங்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்தன. அதை அதிமுக ஆட்சியில்தான் சரிசெய்தோம். இதோபோல குடிநீர் பிரச்னையை சரி செய்ததும் எங்கள் ஆட்சியில்தான் என்கிறார்.
சாலை வசதிகள், மின் பற்றாக்குறை மற்றும் பல பிரச்னைகள் அதிமுக ஆட்சியில் சரிசெய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வெகுவாக பயனடைந்து வருகின்றனர். மீண்டும் அம்மாவின் நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று பேசுகிறார்.
அண்ணாநகர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவான கோகுல இந்திரா தொகுதியை தக்கவைக்கும் முயற்சியில் முழு மூச்சோடு பிரச்சாரம் செய்து வருகிறார் கோகுல இந்திரா. காலையிலும், மாலையிலும் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
உற்சாக வரவேற்பு
தினசரி காலையில் தொடங்கும் ஓட்டு வேட்டை மதியம் வரையிலும், வெயில் தாழ்ந்த பின்னர் 4 மணிவாக்கில் தொடங்கி இரவு வரைக்கும் 9 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அன்பான வரவேற்பு அளித்து ஆரத்தி எடுக்கிறார்கள். மலர் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.
ஆரத்தி, சால்வைகள்
வீடுதோறும் ஆரத்தி எடுத்து தேங்காய் உடைக்கிறார்கள். பல்வேறு இடங்களில் சால்வை, மாலைகளை அன்புடன் அணிவித்து வரவேற்கிறார்கள். கோகுல இந்திராவை வரவேற்கும் விதமான வீடுதோறும் இரட்டை இலை கோலங்களை ஆர்வத்துடன் வரைந்திருக்கிறார்கள்.
பூ மழை தூவி
ஒவ்வொரு பகுதிக்கும் ஓட்டு கேட்க செல்லும்போது அந்த பகுதியில் உள்ள மக்களும் ஆர்வத்துடன் அவர்களுடன் சென்று ஆதரவு கேட்கிறார்கள். குழந்தைகளுடன் கை குலுக்குவது, செல்ஃபி எடுத்துக்கொள்வது என உற்சாகமாகவே பிரச்சாரம் செய்து வருகிறார்.
அம்மா முதலமைச்சராக இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்டு வரும் இந்திராவிடம்... நீ போக்கா எங்க ஓட்டு உனக்குத்தான் என்று கூறுகின்றனர்.
குழந்தையை கொஞ்சி
ஓட்டு கேட்டு போன இடத்தில் ஒரு குழந்தையை தூக்க கையை நீட்டியபோது அந்த குழந்தை சிரித்து கொண்டே அவரது கைக்கு தாவியது. அந்த குழந்தையை வாஞ்சையுடன் அப்படியே கையில் தூக்கி சிறிது நேரம் கொஞ்சி மகிழ்ந்து ஓட்டு கேட்க அந்த குழந்தையுடன் சில வீடுகளுக்கு சென்றார். பின்னர் அந்த குழந்தையை உரியவரிடம் கொடுத்துவிட்டு ஓட்டு வேட்டையை தொடர்ந்தார்.
வெயில் தாங்கலையே
வெயில் கொளுத்தினாலும் வெந்து தணிந்தாலும்... வேர்த்து ஊற்றினாலும் சிரித்த முகத்தோடு வலம் வருகிறார் கோகுல இந்திரா. அடிக்கிற வெயிலுக்கு ஆள் கறுத்துபோனாலும் முகம் நிறைய புன்னகை தாங்கி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார். அம்மாவின் ஆட்சி மீண்டும் தொடரும் அதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும் என்கிறார் நம்பிக்கையாக.
அம்மாவின் சாதனைகள்
பட்டா வசதி, வீடுகள் தோறும் குடிநீர் வசதி, நிலத்தடி நீர், ஏழை எளியோர்கள் உணவருந்த வசதியாக அம்மா உணவகம், அம்மா மருந்தகம், மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள், ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் சுபகாரியங்கள் நடத்த ஏதுவாக சமூகநலக்கூடம் ஆகியவைகளை அம்மா செய்துள்ளார். அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வையுங்க என்று கேட்கிறார் கோகுல இந்திரா.