கடல் நீர் சர்க்கரை ஆகலாம்... ஆனால் ஸ்டாலின் எண்ணம் பலிக்காது... அமைச்சர் டி.ஜெயக்குமார்
கடல்நீர் சர்க்கரை ஆகலாம், ஆனால் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்: கடல்நீர் சர்க்கரை ஆகலாம், ஆனால் ஸ்டாலினின் எண்ணம் எப்போதும் பலிக்காது என்று மீன்வள துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். அப்போது முதலே எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்து வந்தனர்.
மேலும் கொறடா உத்தரவை மீறியதாக 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது நாள் முதல் பெரும்பான்மையை நிரூபிக்க கோரியும், தகுதி நீக்கத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் வழக்கு
அந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாக உள்ளது. இதனிடையே தமிழகத்துக்கு என புதிய ஆளுநரை மத்திய அரசு நியமித்துள்ளது.

அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு
தமிழக அமைச்சர்கள் மீது டிடிவி தினகரன் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் ஜெயலலிதா மரண விவகாரத்தில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷனுக்கு பதிலாக தற்போது பதவியில் இருக்கும் நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பினர் கோரினர்.

டி.ஜெயக்குமார் பேட்டி
காஞ்சிபுரத்தில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக ஆட்சி தமிழகத்தில் 200 ஆண்டுகள் தொடரும். கடல்நீர் இனிப்பாக மாறலாம், ஆனால் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது.

ஜெயக்குமார் கண்டனம்
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களை டிடிவி தினகரன் குறை கூறுவதை ஏற்க முடியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணை கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஒரு நீதிமன்ற அமைப்பு உண்மையை வெளிக் கொண்டு வர யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications