லூசு போல சிரிக்கிறார் தினகரன்.. இதையேதான் தங்கமணியும் சொன்னாரு... ஜெயக்குமார் அட்டாக்!
டிடிவி தினகரன் லூசு மாதிரி சிரிக்கிறார் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: எங்கு பேசினாலும் தினகரன் காரணமே இல்லாமல் லூசு போல சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பிள்ளையார் சதுர்த்திக்கு பிறகு அதிமுகவில் தேர்தல் வியூகம் பலமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் எங்கு பேசினாலும், டிடிவி தினகரனை ஒருபிடி பிடித்து விடுகிறார்கள். மதுரை சைக்கிள் பேரணியின்போது பேசிய அமைச்சர்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் தாளை காட்டி திருட்டுத்தனமாக டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றுவிட்டார், இனி அது நடக்காது, ஜெயலலிதா ஜெயிலுக்கு போக காரணமாக இருந்ததே டிடிவிதான் என கடுமையாக சாடினார்கள்.
ஜெயக்குமார் அட்டாக்
இப்போது அந்த வரிசையில் அமைச்சர் ஜெயக்குமாரும் சேர்ந்துள்ளார். ராயபுரத்தில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து மற்ற கட்சிகள் இல்லாமல் அதிமுகவுக்கு வியப்பாக போய்விட்டது. அவ்வளவு கூட்டம் கூடியிருந்தது. அப்போது பேசிய ஜெயக்குமார் பேசியதாவது:
தினகரன் தீட்டிய திட்டம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவை கைப்பற்ற சசிகலா குடும்பம் முயற்சி செய்தது. அ.தி.மு.கவை அவர்கள் கைப்பற்ற நினைத்தது நல்லது செய்வதற்கு அல்ல கட்சியை சுரண்டுவதற்கு. இது தெரிந்து தான் சசிகலா குடும்பத்தையே முற்றிலுமாக ஒதுக்கிவைத்துவிட்டோம். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே சசிகலா குடும்பத்தினர் சதி செய்தனர். இதையெல்லாம் தெரிந்துதான், அவர்களை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். ஜெயலலிதா இருக்கும் போதே முதலமைச்சராக திட்டம் தீட்டியவர் தினகரன். அதனால்தான ஜெயலலிதா கடைசிவரை வரை கிட்டயே சேர்க்கவில்லை.
ரகசிய தகவல்
நாடாளுமன்றத்திற்கு தினகரன் போகவே கூடாது என்று கூட ஜெயலலிதா உத்தரவு போட்டார். லண்டனில் ஓட்டல் வாங்கிய வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் பெயர்கள் கடைசி வரை நீக்கப்படவே இல்லை. ஆனால் தினகரன் பெயர் மட்டும் நீக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த திமுகவிற்கு சில ரகசிய தகவல் கொடுத்ததால் இந்த வழக்கில் இருந்து தினகரன் பெயர் நீக்கப்பட்டது.
லூசு போல சிரிக்கிறார்
அப்படிப்பட்ட தி.மு.கவுடன் உறவு வைத்துக் கொண்டு நம்மையே காட்டிக் கொடுத்தவர் தினகரன். இப்போது எங்கு பேசினாலும் தினகரன் காரணமே இல்லாமல் சிரிக்கிறார். அமைச்சர் தங்கமணி கூட லூசு தான் அப்படி சிரிக்கும் என்றார். நானும் கூறுகிறேன் தினகரன் காரணமே இல்லாமல் லூசு போல சிரித்துக் கொண்டிருக்கிறார்.
திகார் ஜெயில் தயார்
ஜெயிலுக்கு சென்றதை ஏதோ தியாகம் செய்துவிட்டு போனதை போல் தினகரன் பெருமையாக பேசி வருகிறார். ஆனால் திருடனுக்கும் தியாகிக்கும் வித்தியாசம் உள்ளது. திருடன் யார் என்று கண்டிப்பாக மக்களுக்கு தெரியும். இன்னொரு முறை தினகரன் ஜெயிலுக்கு போவார். தினகரனுக்காக திகார் ஜெயில் காத்திருக்கிறது.
இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.