து.பொ.செ. தினகரனை சந்திப்பதில் என்ன தப்பு...அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொளேர்!
கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தான் அவரை சந்திப்பதில் என்ன தவறு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : எம்எல்ஏக்கள் பலர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான அவரை சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அடிதடி களேபரங்கள் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில் டிடிவி தினகரன் சிறையில் இருந்து வெளியானது முதல் அவரை சந்தித்து ஒரு வணக்கத்தை போட்டு வருகின்றனர் எம்எல்ஏக்கள். நேற்று காலை முதல் அடுத்தடுத்த எம்எல்ஏக்களின் வருகையால் தினகரன் படு பிசியாக இருந்தார்.

இந்தியா பாகிஸ்தான் மேட்சை விஞ்சும் வகையில் ஈபிஎஸ், தினகரன் மேட்ச் இருந்தது. ஈபிஎஸ் தரப்பில் இருந்து எத்தனை விக்கெட் தினகரனுக்கு ஆதரவாக விழுகிறது என்பதே நேற்றைய பரபரப்பு செய்தி.
இரவு வரை 27 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று காலையில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ இருவரும் இன்று காலையில் அடையாறு வீட்டில் தினகரனை சந்தித்து அதரவு தெரிவித்தனர். தினகரன் தான் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், சசிகலா தான் பொதுச்செயலாளர் என்று டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் கட்சி விஷயத்தில் அமைச்சர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்றும் தினகரன் ஆதரவு கோஷ்டிகள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தினகரனை எம்எல்ஏக்கள் சந்திப்பதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, எங்கள் சின்னம்மா தான் பொதுச் செயலாளர், டிடிவி தினகரன் தான் துணை பொதுச் செயலாளர். சட்ட மன்ற தேர்தல்நிச்சயமாக வரும் ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் தேர்தல். எங்களுக்குள் சின்ன சின்ன பிச்சனைகள் உள்ளன ஆனால் விரைவில் ஒன்று சேர்ந்து விடுவோம். கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் டிடிவி தினகரன் அவர்களை அனைவரும் சந்தித்து வருகின்றனர். நேரம் கிடைக்கும் போது நானும் சந்திப்பேன். மானியகோரிக்கையின் போது எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications