'அம்மா' மீண்டும் முதல்வராக தங்கத் தேர் இழுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது. ஆனால் அவர் மீண்டும் முதல்வராக அதிமுகவினர் பல்வேறு கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகாசி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தங்கத் தேர் இழுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சுப்பிரமணியன், ஜெயலலிதா பேரவை மாவட்ட அவைத் தலைவர் ராஜவர்மன், சிவகாசி நகர்மன்ற தலைவர் கதிரவன், துணைத் தலைவர் அசன்பதூரூதீன், தொகுதி செயலாளர் சிவக்குமார், நகர் மன்ற கவுன்சிலர்கள் பாலகுரு, கண்ணன், சிவானந்தம், சாந்தி, முத்துமாரி, சின்னதம்பி, ஜெயலலிதா பேரவை திருமுருகன், சின்னதம்பி, சந்தனமாரிப்பாண்டியன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.