கண்காணிப்பையும் மீறி அமைச்சரின் பேனரை கிழிப்பது யார்?.. விடைத் தெரியாமல் விழிக்கும் போலீஸ்!
புதுக்கோட்டையில் போலீஸ் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதையும் மீறிபேனரில் உள்ள சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் படம் கிழிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் வைக்கப்படும் பேனர்களில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் படங்களை மர்ம நபர்கள் கிழித்து வருகின்றனர். இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் போலீஸார் தவித்து வருகின்றனர்.
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக புதுக்கோட்டையில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த நிலையிலும் பேனர்களில் ஒபிஎஸ் படம் இல்லாத பேனர்கள் கிழிக்கப்பட்டு வந்தன.
இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் மீது எடப்பாடி ஆதரவாளர்கள் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அமைச்சரின் படம் கிழிப்பு
இந்நிலையில் ஓபிஎஸ் படம் இல்லாத பேனர்கள் கிழிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் படங்கள் கிழிக்கப்பட்டன. இது தொடர்பாக புகாரின் பேரில் திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மீண்டும் கிழிப்பு
இந்நிலையில் இந்த பிரச்சினை அத்துடன் முடிந்தது என்று பார்த்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் தங்கத் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனரில் அமைச்சர் விஜயபாஸ்கரின் படம் கிழிக்கப்பட்டது.

மீண்டும் ஒட்டப்பட்டது
இதைத் தொடர்ந்து அவரது படம் அவசர அவசரமாக கிழிக்கப்பட்ட இடத்தில் ஒட்டப்பட்டது. இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் அமைச்சரின் படம் மீண்டும் கிழிக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் படத்தை கிழிப்பது யார் என்று தெரியவில்லை.

போலீஸ் கண்காணிப்பு
இதையறிந்த திருச்சி ஐஜி அறிவுறுத்தலின்படி சீருடை அணியாத போலீஸார் கொண்டு பேனர் கிழிப்பதை யார் என்று கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த போலீஸார் ரோந்து செல்லும் நேரமாக பார்த்து யாரோ பேனரை கிழித்து விடுவதால் போலீஸார் திணறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications