ஆளுநர் ரவி என்ன ஆண்டவரா? முதல்வர் ஸ்டாலின் தினமும் 19 மணி நேரம் உழைக்கிறார்! -அமைச்சர் சேகர்பாபு
சென்னை: ஆளுநர் ரவி என்ன ஆண்டவரா? என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வினவியுள்ளார்.
மக்கள் பணி செய்யவே நேரம் சரியாக இருக்கும் போது, நியமன பதவியில் இருக்கும் ஆளுநருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஆட்சிக்கு இல்லை என சூடாக தெரிவித்தார்.
சென்னையில் ஆய்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

ஆளுநரின் குற்றச்சாட்டுகளுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கனவே விரிவான பதிலை கொடுத்திருப்பதால் மேலும், அதைப்பற்றி பேச வேண்டாம் என நினைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை தினமும் 19 மணி நேரம் உழைக்கிறார் என்று கூறிய அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சரை ஆளுநர் ஏற்கனவே பாராட்டியதை சுட்டிக்காட்டினார்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்கள் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மீட்கப்பட்ட நிலங்களில் பாஜகவை சேர்ந்த 6 பேர் தான் அதிகளவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள் எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இதற்காக ஆளுநர் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தால் நியாயமாக அவர் அரசுக்கு தான் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சி என்றும் தவறு எங்கு நடந்தாலும் நடவடிக்கை பாயும் எனத் தெரிவித்தார்.
சிதம்பரம் தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்து கொடுத்திருக்கிறாரா என்று வினவிய சேகர்பாபு புகார்களின் மீது ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை தொடரும் என உறுதிகாட்டினார்.












Click it and Unblock the Notifications