இந்த ஈபிஎஸ்.. அந்த ஓபிஎஸ்... செம எரிச்சலில் செங்கோட்டையன்!
முதல்வர், முன்னாள் முதல்வர் ஆகியோரால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எரிச்சலடைந்தார்.
ஈரோடு: முதல்வர், முன்னாள் முதல்வர் ஆகியோரின் செயல்பாடுகளால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எரிச்சலடைந்துள்ளாராம்.
அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை இப்போது அப்போது என இழுத்தடிப்பு ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதில் எடப்பாடி அணியில் உள்ள மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈரோட்டில் நேற்று மாலை அதிமுக தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையனின் முகம் வாட்டமாகவே இருந்தது. இதற்கான காரணம் குறித்து அங்கிருந்த நிர்வாகிகள் முனுமுனுத்துக் கொண்டிருந்தனர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள செங்கோட்டையன் விரும்பினார்.
ஆனால் எடப்பாடி தான் மட்டும் கலந்து கொள்வதாக கூறி, செங்கோட்டையனை விட்டுவிட்டு சென்று விட்டார். இதனால் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அமைச்சர் செங்கோட்டையன் கடுகடுவென இருந்தார் என்றும் நிர்வாகிகள் பேசிக் கொண்டனர்.
அடுத்தபடியாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை கொட்டிவாக்கத்தில் நடத்திய கூட்டத்துக்கு கட்சி தொண்டர்களிடம் வரவேற்பு கிடைத்ததும் மற்றொரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.