அடுத்த சிஎம் செங்கோட்டையன்? புதுச்சேரி ஹோட்டலில் எம்எல்ஏக்கள் புதிய ஆலோசனை!
தமிழகத்தின் புதிய முதல்வராக அமைச்சர் செங்கோட்டையன் அமர வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கருதுவதாக செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
புதுச்சேரி: எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ள தினகரன் ஆதரவு எம். எல். ஏக்கள், செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி அளித்தால் என்ன என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க. இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தனி அணியாகச் செயல்படுகிறார்கள். நேற்று அவர்கள் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதமும் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் அதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. அரசில் குழப்பங்கள் நீடிக்கும் சூழ்நிலையில், சபாநாயகர் தனபாலை முதல்வராக ஆக்க வேண்டும் என்று திவாகரன் யோசனை தெரிவித்தார்.
அதனை முழுவதுமாக மறுத்துள்ள டி.டி.வி. தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக அவர்கள் தீவிரமாக புதுச்சேரி ஹோட்டலில் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சரான செங்கோட்டையன் எந்த அணியையும் சேராதவர். மேலும் அ.தி.மு.க.வில் இரு அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில் செங்கோட்டையன் மட்டும் எந்தக் குற்றச்சாட்டும் கூறாமல் அமைதி காத்தார். அதனால் அவர் முதல்வராக வரலாம் என்றும் டிடிவி தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications