அதிமுக நிலைமை குழாயடி சண்டையை விட மோசமாகிவிட்டது... அமைச்சர் உதயகுமார் ஆதங்கம்!
சுயநல நோக்கத்துடன் செயல்படும் சிலரால் கட்சி குழாயடி சண்டையைவிட மோசமாகிவிட்டதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்த கட்சியை சுயநலம் காரணமாக குழாயடி சண்டையைவிட கேவலப்படுத்திவிட்டதாக அமைச்சர் உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது : கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கும் சசிகலா குடும்பத்திற்கு ஜெயலலிதா என்ன அந்தஸ்து கொடுத்திருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இல்லாத ஒன்றை இட்டுக்கட்டு சொல்லி தொண்டர்களை குழப்புகிறார்கள்.

தொண்டர்களிடையே பதவியாசை காட்டி சகோதர யுத்தத்தை ஏற்படுத்துகின்றனர், 10 ஆண்டு காலம் இந்த கட்சியில் என்ன நடந்தது என்றே தெரியாமல் திடீரென உள்ளே வந்து, யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்துக் கொண்டு கட்சியில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.
ஜெயலலிதாவால் தொடர்ந்து ஒதுக்கி வைத்தவர்களை வைத்து செயல்படுகின்றன முறை தேவையில்லாதது. இதனால் கட்சித் தொண்டர்களிடையே குழாயடி, தெருச்சண்டையை விட மோசமான நிலை நடக்கிறது. இது முழுக்க முழுக்க அவர்களையே சுற்றி வர வேண்டும் என்ற சுயநல நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
தொடர்ந்து 45 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றியவர்களை நீக்குகிறேன் என்று ஒரு வரி செய்தியில் சொல்கின்றனர். ஜெயா டிவியும், நமது எம்ஜிஆரும் ஜெயலலிதாவின் திட்டங்களை எடுத்து சொல்வதற்காக உருவாக்கப்பட்டது, ஆனால் இன்று ஜெயலலிதா அரசுக்கு எதிரான செய்திகளை அவை ஒளிபரப்பி வருகின்றன.
ஒருவரின் சுயநலத்திற்காக இந்த கட்சியின் செயல்பாடுகளை மக்கள் எள்ளி நகையாடும் நிலைக்கு தள்ளியுள்ளனர். இந்தியாவே திரும்பிபார்க்கும் ராணுவ கட்டுப்பாடுடன் செயல்பட்ட கட்சியை இன்று கேலிக்கூத்தாக்குகின்றனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications