என்னாது நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?.. அப்ப எம்ஜிஆர், ஜெயலலிதா யாரு??
சென்னை: நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார். அப்படியானால் திரையுலகிலிருந்து வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா யார் என்று மக்கள் நமட்டுச் சிரிப்புடன் கேட்கிறார்கள்.
சமீபகாலமாக பொது இடங்களில் பேசி வரும் அமைச்சர்களுக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை. எதையும் பேசுவதற்கு முன்னரே யோசிப்பதில்லை. தப்பும் தவறுமாக பேசுகிறார்கள்.
இப்படிதான் ஒரு நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் சசிகலா கோடிக்கணக்கில் கொள்ளையடிச்சி சம்பாதித்து வைத்துள்ளார் என்பதற்கு பதிலாக சசிகலாவுக்கு பதில் ஜெயலலிதா என்று கூறிவிட்டார்.
[ அரசை சீண்டிய பேச்சு.. பதிலடி கொடுத்த அமைச்சர்.. அதிமுக - விஜய்க்கு இடையே உருவான மோதல்! ]

"பிரதமர் நரசிம்மராவுடன்" பேச்சு
அதே போல் அவரே இன்னொரு விழாவில் பேசும்போது தம்பிதுரையை பாராட்டி பேசியபோது அதாவது அவர் பம்பரம் போல் சுழல்கிறார் என்பதை சொல்லும் போது பல்வேறு ஊர்களில் நல திட்டங்களில் கலந்து கொள்ளும் தம்பிதுரை திடீரென டெல்லிக்கு சென்று பிரதமர் நரசிம்மராவுடன் பேசிக் கொண்டிருப்பார் என்றார்.

பரபரப்பு
இவரை விட அமைச்சர் செல்லூர் ராஜூதான் டாப்பு. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்பதற்கு பதில் எய்ட்ஸ் மருத்துவமனை என்று கூறிவிட்டார். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. நடிகர் விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய அரசியல் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்களுக்கு அரசியல் தெரியாது
இது இன்றைய ஆட்சியாளர்களுக்கு நெருப்பை அள்ளி கொட்டுவது போல் இருந்தது. இதுகுறித்து அமைச்சர் உதயகுமார் கூறுகையில் நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்று கூறினார். இதை வைத்து சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர். நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்றால் அப்ப எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கும் அரசியல் தெரியாது என்று வைத்துக் கொள்ளலாமா. பொற்கால ஆட்சி கொடுத்தவர் ஜெயலலிதா என்று கட்சியினராகிய இவர்கள் கூறுவது சும்மா ஒப்புக்கு சப்பு என எடுத்து கொள்ளலாமா என கேட்கிறார்கள்.

மக்கள் முடிவு செய்யட்டும்
ஒரு நடிகர் அரசியலை பற்றி பேசினாலே ஆட்சியாளர்களுக்கு தாங்க முடியவில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு அரசை பற்றி குறை கூட அனைவருக்கும் உரிமை உண்டு. முடிந்தால் அந்த குறையை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அரசியலை பார்த்து கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

யார் வர வேண்டும்
நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்றால் அவர்களின் வாக்குகள் மட்டும் தேவையா. யார் யார் அரசியலுக்கு வருகிறார்களோ வரட்டும், மக்கள் பார்த்து என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்துவிடுவார்கள். ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறி கொள்கிறீர்களே பிறகு ஏன் இவர்களை பார்த்து பதற வேண்டும். மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ அவர்களே ஆட்சி செய்வர் என்பதை மறந்துவிட வேண்டாம் என மக்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications