எம்.ஜி.ஆருக்கு கல்தா.. ஜெ. முகமூடியுடன் வலம் வந்த மகளிர் படை.. ஆர்.கே.நகரில் அதிமுக அமர்க்களம்!
சென்னை: ஒரு ஜெயலலிதா வந்தாலே வாக்காளர்களுக்கு ஆச்சரியம் அதிகரிக்கும். ஆயிரக்கணக்கான ஜெயலலிதாக்கள்... இரட்டை இலை சின்னத்துடன் இரு விரலை உயர்த்தி வாக்கு சேகரித்தால் எப்படி இருக்கும். ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கும் நேற்று அப்படித்தான் இருந்தது.
தேர்தல் வந்தாலே எம்.ஜி.ஆர் போல வேடமணிந்தவர் ஆடி பாடி இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பார். அது பழைய டிரென்டு என்று நினைத்து விட்டார்களோ என்னவோ? மகளிர் அணியினர் ஜெயலலிதா முகமூடியை போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்தனர். வீதி தோறும் வலம் வந்த ஜெயலலிதாக்களுக்கு மக்களிடம் அமோக ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது.
வளர்மதியின் பலே ஐடியா!
ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு சேகரிக்க தினசரி புது புது ஐடியாவாக யோசித்து செயல்படுத்திவரும் அமைச்சர் வளர்மதிக்கு திடீரென்று உதித்தது புது யோசனை. அதுதான் அம்மா முகமூடி. உடனே அதை செயல்படுத்தியும்விட்டார்.
ஜெ. முகமூடி
மகளிர் அணியினர் அனைவருக்கும் ஜெயலலிதாவின் முகமூடியை போட்டுவிட்டு வாக்கு சேகரிக்க கிளம்பினார். இந்தயுக்திக்கு வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
ஜெ.மயமான ஆர்.கே.நகர்
வரிசை வரிசையாக ஜெயலலிதா முகமூடி அணிந்த பெண்கள் இரட்டை இலை சின்னம் தாங்கியபடி வலம் வந்து வாக்கு சேகரித்தனர். இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் அம்மா மயமாக காட்சியளித்தது.
நாங்களும் வருவோம்ல
வளர்மதி தலைமையில் பெண்கள் வாக்கு சேகரித்த வரும்போது வீட்டின் மாடியில் இருந்து ஜெயலலிதா படம் போட்ட பதாகையை உயர்த்தி பிடித்து எங்களின் ஆதரவு உங்களுக்கே என்று சொல்லாமல் சொன்னார் ஒரு வாக்காளர்.
இது தனி பிரச்சாரம்
கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடி வாக்காளர்களைக் கவருவதை விட அனைவரும் ஜெயலலிதாவின் முகமூடியை மாட்டிவிட்டு வாக்கு சேகரித்தது ஆர்.கே.நகர்வாசிகளை கவரத்தான் செய்தது.
ஒரு நாள் மட்டுமே
தான் போட்டியிடும் தொகுதியில் ஜூன் 21ம் தேதி ஒருநாள் மட்டுமே ஜெயலலிதா வாக்கு சேகரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அம்மா முகமூடியை போட்டுவிட்டு வாக்காளர்களை மட்டுமல்ல... ஜெயலலிதாவையும் கவர்ந்து விட்டார் வளர்மதி என்றே கூறவேண்டும்.