போன மாதம் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை... இந்த மாதம் கூட்டாளி தற்கொலை - வீடியோ
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஒரு மாதம் முடிந்த நிலையில் அவரது கூட்டாளி தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய கூட்டாளி சுப்ரமணியன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். விஜயபாஸ்கரின் வீட்டில்சோதனை நடந்த ஒரு மாதத்தில் சுப்பிரமணியன் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தார். அதன்பிறகு தமிழகத்தில் பல்வேறு திகில் காட்சிகளும் மர்மக் கொலைகள் மற்றும் தற்கொலைகளும் அரங்கேறி வருவது பொதுமக்களை திகிலடைய வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
மேலும் வருமான வரித்துறையினர் இவர்கள் நால்வரையும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி, தீவிர விசாரணை நடத்தினர். குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, சொந்த ஊரில் உள்ள அலுவலகம், கல்குவாரி உள்ளிட்ட பல இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பலமுக்கிய ஆவணங்கள் சிக்கின. அதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் அச்சத்திலும் மன உளைச்சலிலும் இருந்தார்.
விஜயபாஸ்கரின் அனைத்து அரசியல், வியாபார நடவடிக்கைகளைப்பற்ரித் தெரிந்தவர் அவரது கூட்டாளியாகக் கூறப்படும் நாமக்கல் சுப்பிரமணியன்தான். மருத்துவத்துறை ரீதியான கான்ட்ராக்ட் வேலைகளை சுப்பிரமணியன் தான் செய்து வந்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு சரியாக ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், சுப்பிரமணியன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சுப்பிரமணியன் அவரது தோட்டத்தில், சூப்ரவைஸர் தங்கும் அறையில் விஷமருந்திக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அதனைப் பார்த்த சுப்பிரமணியனின் சூப்ரவைஸர் காரிலேறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமுன் அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
அரசியல்வாதிகள் எந்த சிக்கலிலும் மாட்டாதவரை அவரது கூட்டாளிகள் நலமுடனும் 'வளமுடனும்' வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டால் குறைந்த கால அவசாகத்தில் அவர்களே தற்கொலை செய்துகொள்ளும் அவலம் நடக்கிறது. தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். உண்மை வெளிவருமா? என்பதுதான் கேள்விக்குறி.