விஜயபாஸ்கருக்கு நேரம் சரியில்லை... அவர் மூலம்தான் சேகர் ரெட்டியுடன் கரம் கோர்த்தாராம் பிரேம்!
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டியின் கூட்டாளி பிரேம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் அறிமுகமானவர் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான சேகர் ரெட்டி போயஸ்கார்டன் வீட்டிற்கு நெருக்கமானவர். அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோர் வீடுகளில் கடந்த 7ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகளும், அமலாக் கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
சென்னை, வேலூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 24 நாட்களில் இவர்கள் மாற்றியுள்ளது தெரியவந்தது.
சேகர் ரெட்டி வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வங்கி அதிகாரிகளின் துணையுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 409, 420 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(2), 13(1) ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சேகர் ரெட்டி கைது
சேகர் ரெட்டி. அவரது நண்பர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டியும் அவரது நண்பர் சீனிவாசலுவும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 4 வரை சிறை
இந்த நிலையில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேரை இன்று சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். பிரேம், ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேரையும் ஜனவரி 4ம் தேதிவரை சிறையில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேகர் ரெட்டியின் நண்பர்கள்
கைது செய்யப்பட்ட 3 பேரில் பிரேம் என்பவர் சேகர் ரெட்டியின் நீண்டகால நண்பர் ஆவார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் சேகர் ரெட்டிக்கு பிரேம் அறிமுகமானவர். பிடிபட்டுள்ள மற்றொரு நபர் திண்டுக்கல் மணல் வியாபாரி ரத்தினம் ஆவார். 3வது ஆள் மணல் வியாபாரி புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆவார்.
ரத்தினம், சேகர் ரெட்டி, புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து மணல் வியாபாரம் செய்து வந்தனர்.
சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், சேகர் ரெட்டிக்கும் நீண்ட கால நட்பு உண்டு. இந்த நட்பின் அடிப்படையிலேயே பிரேமுடன் நட்பான சேகர் ரெட்டி தொழில் கூட்டாளியாகவும் மாறினார். இந்த நிலையில் தற்போது சேகர் ரெட்டியுடன் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை இதோடு நிற்குமா, அல்லது அமைச்சர்கள் வரை நீளுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.