அமைச்சர்களுக்கு டெங்கு வந்தால்தான் ஒப்புக் கொள்வார்கள்... துரைமுருகன் கலகல
அமைச்சர்களுக்கு டெங்கு வந்தால்தான் அது இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்வர் என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை: டெங்கு பாதிப்பு தங்களுக்கு வரும் அப்படி இருப்பதாக அமைச்சர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் உள்ளதாக கூறுகிறது. எனினும் நோய் பாதிப்பால் அன்றாடம் உயிரிழப்புகள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டன.
இந்நிலையில் மத்திய மருத்துவக் குழுவினர் தமிழகம் மற்றும் புதுவையில் ஆய்வு மேற்கொண்டனர். டெங்குவை கட்டுப்படுத்த வீதிவீதியாக பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
அமைச்சர் தகவல்
இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் ஆய்வு நடத்தினார். அப்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
துரைமுருகன் பதிலடி
இதுகுறித்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறுகையில், தமிழகத்தில் அன்றாடம் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் மாண்டு வருகின்றனர். ஆனால் அமைச்சரோ டெங்கு கட்டுக்குள் கிடப்பதாக கூறியுள்ளார்.
அமைச்சர்களுக்கு டெங்கு
டெங்கு இன்னும் பரவி வருகிறதா அல்லது கட்டுக்குள் இருக்கிறதா என்பதை அறிய வேண்டுமானால் அமைச்சர்களுக்கு டெங்கு வந்தால்தான் தெரியும். அதுவரை உண்மைக்கு புறம்பான செய்திகளைத்தான் அவர்கள் கொடுப்பர்.
நீரை சேமிக்க..
தமிழகம், ஆந்திரத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதையடுத்து பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியிருந்தால் நீரை சேமித்திருக்கலாம். தடுப்பணை கட்ட உலக வங்கியில் ரூ.1500 கோடி பெற்ற பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
பணமும் இல்லை
இதனால் தடுப்பணைகளும் இல்லை. உலக வங்கி வழங்கிய நிதியும் இல்லை. தமிழகத்தில் ஆட்சி நடத்தாமல் குடிசைத் தொழில் நடத்தி வருகின்றனர் என்றார் துரைமுருகன்.