'எலி' வந்துருச்சு.. 'எலி' வந்துருச்சு.. ஓடியா ஓடியா.. !
சேலம்: அடேயப்பா.. முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கூட இம்புட்டு மரியாதை காட்ட மாட்டாங்கப்பா இந்த அதிமுகவினர். ஆனால் அவர் பயணிக்கும் ஹெலிகாப்டருக்கு என்னா மரியாதை.. என்னா மரியாதை.
ஜெயலலிதா பங்கேற்கும் பிரசாரக் கூட்டங்களுக்கு முன்கூட்டியே வந்து விடும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் வரலாறு காணாத வகையில் ஓடி ஓடி அம்மாவை வரவேற்கும் சீன் இருக்கே.. கண் கொள்ளாக் கண்காட்சியாக இருக்கிறது.
ஹெலிகாப்டரைப் பார்த்ததும் ஏதோ கருட சேவையைக் கண்ட கணக்காக அத்தனை பேரும் ஓடுவதைப் பார்த்தால் அலேக் ஆக இருக்கிறது.

கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்த ஜெ...
சேலம் தொகுதியில் அதிமுக சார்பில் பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தார் ஜெயலலிதா.

முதல்ல ரிஹர்சல்
அவரது ஹெலிகாப்டர் வருவதற்கு முன்பு ஒரு ரிஹர்சல் பார்த்தனர். முதலில் அந்த ரிஹர்சல் ஹெலிகாப்டர் வந்தது. பிறகுதான் ஜெயலலிதா வந்தார்.

படியைத் தூக்கு படியைத் தூக்கு...
முதலவர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் வந்ததும், அவர் இறங்குவதற்கு வசதியாக சில காவலர்கள் படிக்கட்டுக்களைத் தூக்கிக் கொண்டு ஓடினர்.

வாங்கோன்னா.. அட வாங்கோன்னா...
அடுத்து பூக்கள், கும்பம் சகிதம் சில புரோகிதர்கள் வந்தனர். அவர்கள் முதல்வரிடம் அதைக் கொடுத்து வாழ்த்தி வரவேற்றனர்.

கும்புடறோம் சாமீ...
அடுத்து அமைச்சர் பெருமக்கள், எம்.எல்.ஏக்கள். மா.செ ஆகியோர் அம்மாவிடமிருந்து சற்று தூரத்தில் நின்றபடி அப்படியே வில் மாதிரி வளைந்து நெளிந்து சம்பிரதாய முறையில் வணக்கம் வைத்து கும்பிட்டனர். சரி கும்பிடோடு முடியும் என்று பார்த்தால, ஏதோ மயக்கமடித்து விழுவது போல அத்தனை பேரும் சரசரவென அம்மாவின் காலை நோக்கி விழுந்தனர்.

காருக்கு முன்னாடி ஓட்டப் பந்தயம்
அடுத்து முதல்வர் ஜெயலலிதா மேடைக்குச் செல்வதற்காக பாதுகாப்பு காரில் ஏறிக் கொண்டார். கார் கிளம்பியது. ஆனால் அதை விட படு துரிதமாக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் காருக்கு முன்னால் குடுகுடுவென மேடையை நோக்கி ஓடத் தொடங்கினர். வேட்டி காலைத் தட்டாமல் விறுவிறுவென அவர்கள் ஓடியதற்குததான் காசே....

மறுபடியும் வில்லு...
முதல்வர் மேடையை அடைந்து ஏறி நின்றதும் மறுபடியும் ஒருமுறை அத்தனை பேரும் வில் போல வளைந்து.. அதேதான்.. வணக்கம் வைத்தனர்.

நீங்கள் செய்வீர்களா..
அதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தனது பேச்சைத் தொடங்கினார். உணர்ச்சிகரமாக உரையாற்றி செய்வீர்களா..நீங்கள் செய்வீர்களா.. எனறு நாடி நரம்பு புடைக்க அவர் மக்களைப் பார்த்துக் கேட்டபடி தொடர்ந்தார்...
இன்னைக்கு வெயில் ஜாஸ்தியா இருக்குல்ல என்று வாட்டர் பாக்கெட்டை உடைத்து வாயில் ஊற்றியபடி கூட்டத்திற்கு வந்தவர்கள் வெயிலைப் பார்த்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications