ஆத்தா எப்படியாவது மீண்டும் சீட் கிடைக்கனும்.... கோவிலில் தீ மிதித்த அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
சத்தியமங்கலம்: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு மீண்டும் சீட் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
பெருந்துறை சட்டசபை தொகுதியில் இருந்து தேர்வான தோப்பு என்.டி. வெங்கடாசலம் சுற்றுச் சூழல் அமைச்சராக பதவி வகித்தார். தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் பலருக்கும் சீட் கிடைக்காது என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில்ல் பங்குணி மாத திருவிழாவையொட்டி இன்று அதிகாலை தீ மிதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் வேண்டுதல்களை நிறைவேற்ற தீ மிதித்தனர்.
தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தீ மிதித்ததாக அதிமுகவினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜெயலலிதா சிறையில் இருந்ததால் மீண்டும் அவர் முதல்வராக வேண்டி தீ மிதித்தார் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.