சென்னையில் 10 மாடிக் குடியிருப்பில் திடீர் தீவிபத்து... பேரபாயம் தவிர்ப்பு
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் 10 மாடிக் குடியிருப்பில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. ஆனால் துரித கதியில் தீ அணைக்கப்பட்டு விட்டதால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
சென்னை காமராஜர் சாலையில் நேற்றுதான் அரசு அலுவலகமான எழிலகத்தில் தீவிபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றின் அருகே வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 10 அடுக்குமாடி கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டு பதட்டம் ஏற்பட்டது.
இந்தக் குடியிருப்பில் மொத்தம் 124 வீடுகள் உள்ளன. அதில் கீழ்த்தளத்தில் இருந்த குப்பை தொட்டி திடீரென தீப்பிடித்து அருகில் இருந்த மின்சார ஒயர்களிலும் பரவியது. இதனால் தீ பரவி பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து வீடுகளில் இருந்தவர்கள் பயத்தில் வெளியே ஓடி வந்தனர்.
தகவல் அறிந்து 5 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்களும் உதவி செய்தனர். இதன் காரணமாக தீ உடனடியாக அணைக்கப்பட்டது. பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications