சிவகாசி சிறுமி பலாத்கார வழக்கு: சலூன் தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
சிவகாசி: சிவகாசி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சலூன் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மேற்கு, ரிசர்வ் லயன், நேருஜி நகரில் குடியிருந்து வருபவர் கயல்நிஷா (44). இவர் வெள்ளையாபுரத்தில் உள்ள அட்டை மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் மைதீன் மனைவியைப் பிரிந்து நெல்லையில் தேநீர் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களின் 14 வயது மகள் 5-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டில் ராமர் (48) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் சிவகாசி தேவர் தெருவில் முடிதிருத்தம் செய்யும் கடை வைத்துள்ளார். கயல்நிஷா வீட்டிற்கு அடிக்கடி ராமர் வந்து சென்றுள்ளார். மேலும் கயல்நிஷாவின் 14 வயது மகள் தொலைக்காட்சி பார்ப்பதற்காக ராமர் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் 15.9.2012-ம் தேதி பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராமர் வீட்டிற்கு சிறுமி வந்துள்ளார். அப்போது ராமர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராமரைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி என்.ராஜலட்சுமி, ராமருக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு (இ.த.ச.376) 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இளஞ்சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 2012 பிரிவு 3 மற்றும் 4-ன் கீழான குற்றத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அபராதத் தொகை ரூ.30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மேல்முறையீடு காலத்திற்குப் பின்னரோ அல்லது மேல்முறையீடு முடிவடைந்த பின்னரோ தகுந்த ஆவணங்களின் நஷ்டஈடாக அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications