திண்டுக்கல்லில் மைனர் பெண்ணின் திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 18 வயது கூட நிரம்பாத பெண்ணிற்கு நடக்க இருந்த திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள தும்மலபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கும் சென்னையை சேர்ந்த 18 வயது நிரம்பாத மாணவி ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் வத்தலக்குண்டு போலீசார் திருமண மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
மணமகளுக்கு 18 வயது ஆகிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் அதை நம்பாத அதிகாரிகள் மணமகளிடம் விசாரணை நடத்தினர். அவரும் தனக்கு 18 வயது நிரம்பிவிட்டதாக தெரிவித்தார். உடனே அதிகாரிகள் வயதை உறுதி செய்ய படிப்பு சான்றிதழை காட்டும்படி கேட்டனர். அதற்கு மணமகள் நான் பள்ளி பக்கமே ஒதுங்கவில்லை என்றார்.
அதிகாரிகள் விடாப்பிடியாக வயதை உறுதி செய்ய ஏதாவது ஒரு சான்றை தருமாறு கேட்டனர். அப்போது பெண் வீட்டார் எல்லா சான்றுகளையும் சென்னையிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டோம் என்றனர்.
இதனால் அதிருப்தி அடைந்த அதிகாரிகள் மணமகளின் வயதை நிருபிக்காமல் திருமணத்தை நடத்த அனுமதிக்கமாட்டோம் என கண்டிப்புடன் தெரிவித்தனர்.
பிரச்சினை நீடித்துக்கொண்டே சென்றதால் ஆவேசமடைந்த மணப்பெண் தான் படிக்கவே இல்லை எனக்கூறியதையும் மறந்துவிட்டு ஆங்கிலத்தில் கோபமாக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். இதனை கேட்டு திடுக்கிட்ட அதிகாரிகள் படிக்கவே இல்லை என்று கூறிய மணமகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது எப்படி என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து வேறு வழியின்றி பெண்வீட்டார் மணமகளுக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதை ஒப்புக்கொண்டனர். இதனால் அவரது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.