பெங்களூரில் திருக்குறள் மன்ற நூலகம் சூறை.. தமிழ் நூல்கள் தெருவில் வீச்சு.. தமிழ் அமைப்புகள் தர்ணா
பெங்களூர்: பெங்களூரில் உள்ள 'திருக்குறள் மன்ற' நூலகம் சூறையாடப்பட்டு அங்கிருந்த சுமார் 10 ஆயிரம் தமிழ் புத்தகங்கள் தெருவில் வீசப்பட்டுள்ளன.
பெங்களூரில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் அல்சூரில் திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகம் செயல்பட்டு வருகிறது. 1976ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள் உள்ளன.

தாமோதர் முதலியார் தெருவில் உள்ள அந்த நூலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்த பெயர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு விஷமிகளால் தார் பூசி அழிக்கப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை மர்ம நபர்கள் நூலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரச் சட்டங்களை உடைத்தனர், மேலும் ஜன்னல்களையும் உடைத்தனர்.
நூலகத்தில் இருந்த 10 ஆயிரம் தமிழ் நூல்களை அவர்கள் தெருவில் வீசினர். இது குறித்து தகவல் அறிந்த திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள் பதறியடித்துக் கொண்டு நூலகத்திற்கு வந்தார்.
40 ஆண்டுகளாக சேகரித்த நூல்கள் எல்லாம் தெருவில் கிடப்பதை பார்த்து அவர் கண்ணீர்விட்டார். நல்லபெருமாளும், தமிழர் முழக்கம் இதழ் ஆசிரியர் வேதகுமாரும் இணைந்து, இதுகுறித்து அன்றே அல்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் புகாரை மிகவும் தாமதமாகவே போலீசார் வாங்கிக்கொண்டதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, கர்நாடக தமிழ்-கன்னட கூட்டமைப்பு நிறுவன தலைவர் மணிவண்ணன், கன்னடர்-தமிழர் நல்லிணக்கம் மற்றும் சமூக நற்பணி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர், போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
தமிழ் நூலகம் சூறையாடப்பட்டதை கண்டித்து, திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இன்று காலை நூலகம் எதிரே தர்ணா நடத்தினர். பெங்களூர் தமிழ் சங்கம் இதில் பங்கேற்கவில்லை.
பெங்களூர் கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சதீஷ் போராட்டக்காரர்களை சந்தித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நூலகத்தை காக்க நிதியம் அமைக்க உதவுவதாகவும் சதீஷ் தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தமிழர்-கன்னடர் நல்லுறவை குலைக்கும் வகையில் விஷமிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது பெங்களூர் வாழ் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications