திருமணத்தில் முடிந்த மிஸ்டு கா(த)ல்- போராடி காதலனை கரம் பிடித்த காதலி
நாகர்கோவில்: மிஸ்டு கால் கொடுத்தவரையே காதலித்து போராடி காதலி கரம் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் பபிதா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்போனில் மிஸ்டு கால் ஒன்று வந்தது. உடனே பபிதா அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது எதிரே பேசிய நபர் தெரியாமல் எண்ணை மாற்றி போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே அந்த நபரிடம் பபிதா எந்த ஊர் என்று கேட்டார். அவர் மதுரை என்றும், தனது பெயர் தினேஷ் என்றும் அறிமுகம் செய்து கொண்டார். தினேஷ் கோவையில் உள்ள ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் கூறினார்.
சில நாட்கள் கழித்து தினேஷ் மீண்டும் பபிதாவிடம் பேசினார். இருவரும் அன்பாக பேசி பழக தொடங்க, அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. காதலர்கள் இருவரும் மணிக்கணக்கில் தினமும் பேசி வந்தனர். காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து தினேஷ் தனது வீட்டை விட்டு வெளியேறி நாகர்கோவிலுக்கு வந்தார். பபிதாவும் தினேஷும் நாகர்கோவிலில் சந்தித்தனர்.
இருவரும் நாகர்கோவிலை சேர்ந்த வழக்கறிஞர் சிவாஜியிடம் தஞ்சமடைந்தனர். அவர் காதல் ஜோடிக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து வைத்தார். காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட தகவல் அவர்களது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
மிஸ்டு கால் தொடங்கி வைத்த காதலை மூன்று வருடமாக ஆராதித்து திருமணம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.