சென்னை: பாதாள சாக்கடையில் இளம்பெண் சடலம் கண்டெடுப்பு - கொலை செய்யப்பட்டாரா?
சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் பாதாள சாக்கடையில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 ந்தேதி முதல் அந்தப்பெண்ணை காணாமல் தேடி வந்த உறவினர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பாதாள சாக்கடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி முதல் சென்னையில் கொட்டிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மட்டுமல்லாது சாலைகளிலும் வெள்ளநீர் குளம்போல தேங்கியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் தண்ணீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மேற்கு மாம்பலம் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், அங்கு மாநகராட்சி ஊழியர்கள் இன்று சரி செய்ய முயன்றனர்.
அப்போது அதில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் யாராவது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை சாக்கடையில் வீசியிருப்பார்களா என்கிற ரீதியில் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப்பெண் அசோக் நகர் மகாதேவன் நகரை சேர்ந்த பாலி என்பவரின் மகள் தேவிகா என்பது தெரியவந்தது.
திருமணமாகாத தேவிகா, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி தேவிகா காணாமல் போய்விட்டார். உறவினர்கள் பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காததால் மறுநாள் அஷோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் காணவில்லை என புகார் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் மேற்கு மாம்பலம் கே.வி.காலனி 6 வது தெரு அயோத்தியா மண்டபம் அருகில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில் கழிவு நீரகற்று ஊழியர்கள் சாக்கடை அடைப்பை நீக்க மூடியை நீக்கிய போது தலைகீழாக அழுகிய நிலையில் பெண் பிணம் ஒன்று சாக்கடை குழிக்குள் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட தேவிகாவின் உறவினர்களை அழைத்து அடையாளம் காட்ட சொன்னார்கள்.
உறவினர்கள் அடையாளம்
அவர்கள் இது தங்கள் மகள் தேவிகா என்று தெரிவித்தனர். பின்னர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 9ம் தேதி காணாமல் போன தேவிகா பிணமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவிகாவை மர்ம ஆசாமிகள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு பின்னர் கொலை செய்து மழை நேரம் என்பதால் சாக்கடையில் வீசியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே தேவியின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்குபதிவு செய்து அஷோக் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.