கருணாநிதியின் பிள்ளைகளான நாமே நேரில் போய் எடப்பாடியிடம் கேட்போம்.. அழகிரி சொன்ன ஐடியா
சென்னை: கருணாநிதியின் இறுதி சடங்கு மெரினாவில் நடைபெற இடம் ஒதுக்க வேண்டும் என முதல்வரை ஸ்டாலின் உள்ளிட்டோர் போய் பார்க்க வேண்டும் என முன்முயற்சி எடுத்தது நான் தான் என்று அழகிரி தெரிவித்தார்.
கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இருந்தநிலையில் அவரது கடைசி ஆசையான மெரினாவில் சமாதி அமைக்க இடம் அளிக்க வேண்டும் என திமுக கோரியது. இதற்கு தமிழக அரசு மறுத்துவிட்டு காந்தி மண்டபத்தில் இடம் அளித்தது.
இதையடுத்து நீதிமன்றத்தை நாடிய திமுகவுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து ரிபப்ளிக் வேர்ல்டு எனும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அழகிரி பேட்டி அளித்தார்.
அஞ்சலி செலுத்திய போது
அப்போது அவர் கூறுகையில் எனது தந்தையின் கடைசி ஆசை அவருக்கு அண்ணா சமாதிக்கு பக்கத்தில் அடக்கம் செய்வதுதான். அண்ணாதுரை இறந்தபோதே அவருக்கு அஞ்சலி செலுத்திய போது கருணாநிதி கூறியுள்ளார்.
ஆலோசனை
இதையடுத்து கட்சியின் நிர்வாகி ஒருவரை முதல்வரிடம் அனுப்பி கருணாநிதியின் இறுதி ஆசையை கூறி மெரினாவில் இடம் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கனிமொழி, தயா அழகிரி, மற்றும் நான் ஆகியோர் ஆலோசனை நடத்தினோம்.
கோரிக்கை
அப்போது நான் கனிமொழியிடம் கூறுகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச கட்சி நிர்வாகிகளை அனுப்பக் கூடாது. அவர் நமது தந்தை. எனவே நான் , நீ, ஸ்டாலின், தமிழரசு, செல்வி ஆகிய 5 பேரும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என்றேன்.
மூவரும் சந்தித்தோம்
இந்த ஐடியாவை முன்முயற்சியாக கூறியதே நான்தான். அப்போது தமிழரசுவும் செல்வியும் வரவில்லை. நாங்கள் மூவர் மட்டும் சென்று முதல்வரை சந்தித்தோம் .