சென்னையில் மு.க. அழகிரி முகாம்! 'தொண்டர்களுடன் சந்திப்பு' நிகழ்ச்சியை நடத்தும் மு.க. ஸ்டாலின்!!
சென்னை: திமுகவில் மு.க. அழகிரி மீண்டும் இணைத்துக் கொள்ளப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை விரும்பாத மு.க.ஸ்டாலின் தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கட்சி தலைமைக்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததற்காக மு.க. அழகிரி கட்சியை விட்டே டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் திமுக இன்னும் சில மாதங்களில்.. இன்னும் சில மாதங்களில் தம் வசமாகும் என்றே கூறி வந்தார்.
ஆனால் வெளியேற்றப்பட்ட மு.க. அழகிரி மீண்டும் கட்சியில் சேர்ந்து குழப்பம் விளைவித்தால் தமது தலைமைக்கு ஆபத்து என்பதை உணர்ந்த மு.க.ஸ்டாலின் அதற்கேற்ப காய்களை நகர்த்தி வந்தார். ஒவ்வொரு முனையிலும் அழகிரிக்கு செக் வைத்துக் கொண்டிருந்தார்.

சென்னையில் அழகிரி முகாம்
இந்த நிலையில் கருணாநிதியின் மகள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் மூலமாக கருணாநிதியுடன் அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்காகவே மு.க. அழகிரி சென்னையில் முகாமிட்டுள்ளார்.

மீண்டும் திமுகவில்?
எந்த நேரத்திலும் திமுகவில் மு.க. அழகிரி மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படலாம் என்கின்றன கோபாலபுரத்து தகவல்கள்.

விரும்பாத மு.க.ஸ்டாலின்
இப்படி ஒரு பேச்சுவார்த்தை நடைபெறுவதை விரும்பாத மு.க.ஸ்டாலின், தாம் திட்டமிட்டு வைத்திருந்த தொண்டர்களுடன் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியை தொடங்கி விட்டார்.

காஞ்சிபுரத்தில் இருந்து..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இதில் திமுக மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி என அனைத்து தரப்பு திமுக தொண்டர்களும் கலந்து கொண்டு கட்சியின் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

ஃபேஸ்புக்கில்..
இந்த தொண்டர் சந்திப்பு குறித்த விவரத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்திலும் படங்களுடன் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

தொண்டர் நிகழ்ச்சி ஏன்?
இப்படி ஸ்டாலின் தொண்டர்களை நெருங்குவதற்கு காரணமே, அவர் 'நிர்வாகிகளை' மட்டுமே சந்தித்துப் பேசக் கூடியவர் என்ற இமேஜை உடைப்பதுதானாம். இந்த குற்றச்சாட்டை கருணாநிதி, அழகிரி மட்டுமின்றி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பலரும் ஸ்டாலின் மீது முன்வைத்திருந்தனர்.

அழகிரிக்கு செக்
அதனாலேயே தொண்டர்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை ஸ்டாலின் தொடங்கியுள்ளாராம். அத்துடன் இப்படி தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்தால் நிச்சயம் அவர்களை தம் வசப்படுத்தி வைக்க முடியும். நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்களும் என் பக்கமே என்று நிரூபித்து மு.க. அழகிரிக்கு செக் வைக்கலாம் என்பதுதான் ஸ்டாலினின் பிளானாம்.
ஆஹா 'திருவிழா' மீண்டும் களைகட்டிவிட்டதே!












Click it and Unblock the Notifications