தமிழகத்தில் அதிமுக ஆட்சியா பாஜக ஆட்சியா... எல்லாம் மர்மமாக உள்ளது... மு.க.ஸ்டாலின் காட்டம்
தமிழகத்தில் நடைபெறுவது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்பது புரியாத மர்மம் உள்ளது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: தமிழகத்தில் கொல்லைப்புறமாக பாஜக ஆட்சி நடத்துகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் தமிழகத்தில் இருப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்பது புரியாத புதிராக உள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், மக்களை சந்தித்து புதிய தீர்ப்பை அதிமுக பெற வேண்டும். தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசுக்கு அதிமுக அரசு சாமரம் வீசுகிறது.
வாக்களித்த மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அதிமுக செயல்படுகிறது. இதுவரை மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று மக்களுக்கு அதிமுக அரசு விளக்க வேண்டும்.
அதிமுக துரோகம்
மத்திய அரசின் வெற்றிக் கதைகளை தயாரிக்கும் தமிழக அரசின் செயல் மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். மத்திய அரசின் வெற்றிக் கதைகளை தயாரிக்க செய்தித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இதிலிருந்தே எந்த அளவுக்கு மத்திய அரசின் பிடியில் அதிமுக அரசு சிக்கியுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
கொல்லைப்புற ஆட்சி
தமிழகத்தில் இருப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்பது புரியாத மர்மமாக உள்ளது. தமிழகத்தில் கொல்லைப்புறமாக பாஜக ஆட்சி நடத்துகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மண்டியிடுவது துரோகம்
தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் செயல் அதிமுக அரசுக்கு வெற்றிக் கதைகளாக தெரிகிறது.தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜக முன்பு அதிமுக அரசு மண்டியிடுவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
காவடி தூக்கும் அதிமுக
மத்திய அரசுக்கு காவடி தூக்கும் அதிமுக அரசு மக்களின் கோபத்தைச் சந்திக்க நேரிடும். மத்திய அரசின் எடுபிடியாக செயல்படும் அதிமுக அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.