சென்னை குண்டுவெடிப்பு- மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான வாகுப் பதிவு முடிந்த கையோடு ஹாங்ஹாங்குக்கு ஓய்வெடுக்க சென்ற தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வந்த கவுகாத்தி விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகளில் குண்டு வெடித்தது என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொடூரமான இந்த குண்டு வெடிப்பில் இளம்பெண் ஸ்வாதி கொல்லப்பட்டதும் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் என் இதயத்தில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. குண்டு வெடிப்பில் பலியான குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதியின் பெற்றோருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
படுகாயம் அடைந்தவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன், படுகாயம் அடைந்த அனைவரும் விரைவில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்கு அரசு துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications