தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்துவிட்ட ஜெ.க்கு மதுவிலக்கு பற்றி பேச தகுதி இல்லை: ஸ்டாலின் பதிலடி
ஆத்தூர்: தமிழகத்தில் தெருவுக்கு தெரு மதுக்கடைகளைத் திறந்துவிட்ட ஜெயலலிதாவுக்கு மதுவிலக்கு பற்றி பேசுவதற்கு தகுதி எதுவும் இல்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்துவிட்டதே கருணாநிதிதான்; அவருக்கு மதுவிலக்கு பற்றி பேசுகிற அதிகாரம் இல்லை என்று அனைத்து பிரசார கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடி வருகிறார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமியை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

ஜெ.க்கு அருகதை இல்லை
மதுவிலக்கு பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை என்று தொடர்ந்து ஜெயலலிதா கூறிவருகிறார். உண்மையில் மதுவிலக்கு குறித்து பேச ஜெயலலிதாவுக்குத்தான் அருகதை கிடையாது.

கருணாநிதி செய்தது
2007-ம் ஆண்டு மதுக்கடைகளின் நேரத்தை குறைத்தார் கருணாநிதி. அத்துடன் புதிய மதுபான கடைகளுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவித்தார் கருணாநிதி.

கடைகளை திறந்து வைத்த ஜெ
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலோ தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்துக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் என அனைத்தும் திறந்துவிடப்பட்டன; அப்படி திறந்துவிட்ட ஜெயலலிதா, மதுவிலக்கு பற்றி பேச தகுதி இல்லாதவர்.

மிடாஸ்...
மிடாஸ் மதுபான ஆலையை யார் நடத்துவது என மக்களுக்கு தெரியும்... அந்த மிடாஸுக்கு பல்லாயிரம் கோடியை கொடுக்கிற ஜெயலலிதாவுக்கு மதுவிலக்கு பற்றி பேச தகுதி இல்லை.

நத்தம் விஸ்வநாதன்
மதுவிலக்கை அமல்படுத்தவே முடியாது என்று சொன்ன நத்தம் விஸ்வநாதனை தொகுதி மாற்றி இங்கே நிறுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. மின்வாரியத்தில் ரூ1 லட்சம் கோடி ஊழல் செய்தவர் நத்தம் விஸ்வநாதன்.
ஆத்தூரில் 7-வது முறையாக போட்டியிடும் ஐ. பெரியசாமியிடம் தோற்றுப் போக வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்டுள்ளார் நத்தம் விஸ்வநாதன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications