திமுக மாநாட்டுக்கு வெள்ளுடை தரித்த வேங்கைகளாய் வாரீர்: இளைஞர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
சென்னை: திருச்சியில் நடைபெறவிருக்கும் திமுக மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு இளைஞர்களுக்கு திமுக பொருளாளர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கழக வரலாற்றில் பல்வேறு திருப்பங்களை நிகழ்த்தி நீக்கமற நிறைந்து நிலைத்திருக்கும் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் சரித்திர நாயகர் தலைவர் கலைஞர் தலைமையில் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் தி.மு.கழகத்தின் 10-வது மாநில மாநாடு நடைபெறுகிறது.

கழகத் தலைமையின் முடிவை களத்திலே காரியமாற்றுகின்ற பொறுப்போடு, திட்டமிட்டு சீரிய முறையில் பணியாற்றி வரும் திமுக இளைஞர் அணியின் சார்பில், தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 10வது மாநில மாநாட்டின் நோக்கம் குறித்தும், தலைவர் கலைஞர் அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், சாதனைகளையும், அதிமுக ஆட்சியின் அவலங்களையும் பட்டியலிட்டு, அனைத்துத் தரப்பு மக்களும் அறியும் வகையில் தமிழகம் முழுவதும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணி முறையாக, முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனம் காக்க - மொழி காக்க அயராது உழைத்து வரும் நம் ஒப்பற்ற தலைவர், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் கழகத்தின் மாநாடு குறித்து முரசொலி'யில், "திருச்சி மாநாடு கழக வரலாற்றில் மீண்டும் ஒரு சிறப்பான இடத்தைப் பெறும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.
"வெட்டி வா என்றால், கட்டி வரும்" காளைகளாம் என்னுடைய அருமை உடன்பிறப்புக்களே, கழகத்தின் மாநாடுகளையெல்லாம் வெற்றி மாநாடுகளாக்கி கழகத்தின் தலைமையை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திடும் தோழர்களே, இதோ கழகத்தின் பத்தாவது மாநில மாநாட்டையும் வெற்றி மாநாடுகளின் பட்டியலிலே பொன்னெழுத்துக்களால் பொறித்திடப் புறப்படுவீர்!
பத்தாவது மாநில மாநாடு - பாரினில் பார்த்தது உண்டோ இதுபோல் இன்னொரு மாநாடு - என்று நாட்டார் வியக்குமளவுக்கு இதனை நடத்திக் காட்டிடுவீர் என்ற நம்பிக்கையோடு நாளும் காத்திருக்கும் உங்கள் அன்பு அண்ணன்; உங்களின் உடன்பிறப்பு!" என்று குறிப்பிட்டுள்ளதோடு, தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
இதுவரை நடைபெற்றுள்ள மாநாடுகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் அமைந்திடும் இந்த மாநாட்டுப் பணிகளில் இளைஞர் அணியினர் முழுமையாக ஈடுபட்டு வருவதோடு, மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர் அணியினர் விவரப் பட்டியல் மாவட்ட, மாநகர, மாநில மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி வாரியாக தலைமைக்கு வந்த வண்ணம் உள்ளது.
"வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாகவும் - மாள்வது நாமாக இருப்பினும், மீள்வது தமிழினமாகவும், வெள்ளுடை தரித்த வேங்கைகளாய், சீருடை அணிந்த சிங்கங்களாய், குகைவிட்டு வருகின்ற புலியென, புகைவிட்டு குமுறும் எரிமலையென, இனம் காப்போம்! மொழி காப்போம்! என இடிமுழக்கமிட்டு இலட்சோப இலட்சம் இளைஞர் அணியினர் பெருந்திரளாய் பங்கேற்போம்! வெற்றிகளை குவிப்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications