சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் களம்... 32 பொறுப்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் வியூகம்
சென்னை: சட்டசபை தேர்தல் வியூகம் தொடர்பாக தி.மு.க.வின் 32 மாவட்ட பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து தி.மு.க. மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டது.

இதனால் கால்நூற்றாண்டுக்கும் மேலாக குறுநில மன்னர்களாக கோலோச்சிக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர்களின் அதிகார எல்லை குறைக்கப்பட்டது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயதசமி நாளில் தி.மு.க. தலைமை நிலையமானது, 32 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது. அத்துடன் இவர்களை நியமிக்கும் போதே தேர்தல் தோல்விக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தல் பணி பொறுப்பாளர்களில் 18 பேர் முன்னாள் அமைச்சர்கள் ஆவார்கள். இது தவிர மாவட்டச் செயலாளர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடி முகவர்களை தொடர்பு கொண்டு ஆய்வு செய்வது, முக்கிய பணியாகும்.
இதுதவிர உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த கட்சியினருக்கு அறிவுரை வழங்குவதுடன் சட்டசபை தேர்தல் முடியும் வரை தலைமை கழகத்திற்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
32 மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணி பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இவர்களுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
மகளிரணி கூட்டம்
இதேபோல் தி.மு.க. மகளிரணி கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. இதிலும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு தி.மு.க. மகளிரணியினரின் பாடுபடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications