ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேல்முருகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை திமுக செயல்தலைவர் சந்தித்து நலம் விசாரித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை, விழுப்புரம் போலீஸார் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைத் தாக்கிய வழக்கில் அவரை 15 நாட்கள் புழல் சிறையில் அடைத்தனர்.

வேல்முருகன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் வாங்கினார்.
ஆனால், நேற்று மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கும் வேல்முருகனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேல்முருகனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications