தீப்பொறி ஆறுமுகத்தை தாக்கி நாக்கை அறுக்க முயற்சித்தனர்.... மு.க.ஸ்டாலின் நினைவஞ்சலி
மதுரையில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்
மதுரை: தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை இரவு மரணமடைந்தார். அவரது உடலுக்கு சனிக்கிழமையன்று திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ஆளுங்கட்சியை தாக்கி பேசியதற்காக அவரை தாக்கி நாக்கை அறுக்க முயற்சி செய்தனர் என்றும் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.
திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம், வெள்ளிக்கிழமையன்று மதுரையில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல், பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தீப்பொறி ஆறுமுகம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீப்பொறி ஆறுமுகம் மறைவு செய்தி கேட்டு, திமுக தலைவர் கருணாநிதி மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே, என்னை நேரில் சென்று அஞ்சலி செலுத்துமாறு கூறினார். அதனை ஏற்று அவரது உடலுக்கு நான் அஞ்சலி செலுத்தினேன் என்றார்.
தீப்பொறி ஆறுமுகம் இளமை பருவம் முதலே மேடை பேச்சாளராக உள்ளார். தனது கருத்தை துணிச்சலோடு சொல்ல கூடியவர் என்றும் கூறினார்.
அவர் மீது எத்தனையோ வழக்குகள் போடப்பட்டு, பல இன்னல்கள் தரப்பட்டது. ஒரு முறை அவர் கூட்டத்தில் பேசி விட்டு காரில் சென்று கொண்டு இருந்த போது, அளுங்கட்சியினர் அவரை வழிமறித்து அவரை தாக்கி, நாக்கை அறுக்க முயற்சித்தனர். ஆனால் அவர் அதில் இருந்தும் தப்பினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார். திமுகவினர் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் நேற்று மாலை தீப்பொறி ஆறுமுகத்தின் உடல், கீரைத்துறை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தீப்பொறி ஆறுமுகத்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மு.க.ஸ்டாலின் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவட்ட செயலாளர் வேலுச்சாமியை சந்தித்து நலம் விசாரித்தார்.