தேமுதிகவுக்கு புதியதாக அழைப்பு விடுக்கப்படவில்லை- பேச்சுவார்த்தையும் இல்லை... சொல்வது மு.க.ஸ்டாலின்
சென்னை: தேமுதிகவுக்கு கூட்டணி குறித்து புதியதாக எந்த ஒரு அழைப்பும் விடுக்கப்படவும் இல்லை; பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக கூட்டணிக்கு வராது என நம்பிக்கை இழக்கவில்லை என்றார். அத்துடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறியிருந்தார்.

சட்டசபை தேர்தலில் தனித்துதான் போட்டி; தங்களது தலைமையில்தான் கூட்டணி என தேமுதிக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் கருணாநிதியின் இந்த தகவல் தேர்தல் களத்தில் பரபரப்பை கிளப்பியது.
உடனே பாஜகவும் மக்கள்நலக் கூட்டணியும் நாங்களும் தேமுதிகவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்; எங்கள் கூட்டணிக்குதான் வருவோம் என கூறின.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் முக ஸ்டாலினோ, தேமுதிகவுக்கு புதியதாக எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டதை குறிப்பிட்டுதான் கருணாநிதி கூறினார். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இப்போது நடைபெறவில்லை எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே தேமுதிக கூட்டணி குறித்து கருணாநிதி, பழம் நழுவி பாலில் விழும் எனக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தேமுதிக தனித்துப் போட்டி என அறிவித்ததால் கருணாநிதியின் கருத்து மிகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications