எம்.என்.சியில் வேலை... ஆசை காட்டி மோசம்... பெண் பரபரப்பு புகார்
கரூர்: கரூரில் எம்.என்.சி நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்ற பெயரில் முறைகேடு செய்ததாக ஒரு நிறுவனம் மீது பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.
கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பி.எல்.ஏ மஹாலில் இன்று எம்.என்.சி கம்பெனிக்கு ஆட்கள் தேவை என்ற பெயரில் வேலைக்கு ஆளெடுப்பு நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அழர்களிடமிருந்து விண்ணப்பம் மற்றும் சுயவிபரக்குறிப்புகள் ஆகியனவைகளை சிலர் வாங்கினர்.

பகுதி நேர வேலை என்றால் ரூ 9 ஆயிரம், முழு நேரம் வேலை என்றால் ரூ 20 ஆயிரம், ஞாயிறு மட்டும் என்றால் ரூ 6 ஆயிரம் என்று அச்சிடப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு சீட்டுகளை கரூர் நகரம் முழுவதும் விநியோகித்தும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் மதியம் வரை ஆட்களை தேர்வு செய்த நிலையில் முத்துராஜபுரத்தை சார்ந்த எம்.பிரேமலதா என்ற பெண் இந்த ஆளெடுக்கும் பணியின்போது திடீரென அங்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவரிடம், இதே நிறுவனத்தினர் ஏற்கனவே பணம் தர வேண்டாம், வேலை தருகிறோம் என்று கூறியிருந்தார்களாம். பின்னர் அவர்கள் திடீரென ரூ. 8000 பணம் கேடடுள்ளனர். அவரும் தனது கம்மலை அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார். பின் அப்பெண்ணிடம், மேலும் மூன்று பேரை தங்களுக்கு கீழே சேர்த்து கொள்ளுமாறு அந்த நபர்கள் கூறியுள்ளனர். ஆனால் யாருமே இவர்களிடம் சேரவில்லை. இதையடுத்து அந்தப் பெண் தான் கொடுத்த பணத்தை கேட்ட போது எந்த வித நடவடிக்கையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் இந்த எம்.என்.சி நிறுவன வாலிபர்களை இன்று கையும் களவுமாக பிடித்து கரூர் நகர போலீஸில் எம்.பிரேமலதா ஒப்படைத்தார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற எம்.என்.சி கம்பெனி நிறுவனம் மற்றும் எம்.எல்.எம் மார்க்கெட்டிங் நிறுவனத்தை கண்டு பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் பிரேமலதாவின் புகாரை கரூர் நகர காவல் துறையினர் வாங்கி அந்த வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications