கோவை திவிக நிர்வாகி ஃபாரூக் கொலைக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்
கோவை திவிக நிர்வாகி ஃபாரூக் கொலைக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை: கோவையில் திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகி ஃபாரூக் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் ஃபாரூக்(32). இரும்பு வியாபாரம் செய்து வந்த இவர் திரவிட விடுதலை கழகத்தில் தீவிர தொண்டராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு உக்கடம் அருகே ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு அவரை அரிவாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியது. இதனால் ஃபாரூக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், ஃபருக்கை கொலை செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த கொலை சம்பவம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஃபாரூக் கொலை தொடர்பாக அன்சத் என்பவர் இன்று கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில் ஃபாரூக் கொலைக்கு மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குற்றவாளிகள் அனைவரையும் உடனே கைது செய்து தண்டிக்க வேண்டும் எனவும் உயிரிழந்த ஃபரூக் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications