குக்கர் பொங்கலும், ஸ்டிக்கர் கோலமும்: என்ன கொடுமை சார் இது!
சென்னை: கம்ப்யூட்டர் காலத்தில் காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு ஓடும் மக்கள் குக்கர் பொங்கலுக்கு மாறிவிட்டனர்.
தை மாதத்தை விவசாயிகள் மற்றும் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த நன்னாளில் உலக மக்களின் வயிர் குளிர உணவு தானியங்களை விளைவிக்கும் விவசாயிகளின் முகம் பூரித்திருக்கும்.
இது எல்லாம் அந்த காலமாகிவிட்டது. ஏன் என்று தெரியுமா, தெரிந்து கொள்ளுங்கள்,
மழை
மாதம் மும்மாரி பொழிந்த காலம் மலையேறிவிட்டது. பருவ மழைக்காலத்தில் கூட வானம் மழை பெய்ய மறுப்பதால் நிலம் வரண்டு கிடக்கிறது, விவசாயிகளின் வயிறுகள் ஒட்டிப் போயுள்ளது.
பொங்கல் பானை
பண்டிகை அன்று வீட்டு வாசல் அல்லது முற்றத்தில் மண் பானை வைத்து விரகு அடுப்பில் பொங்கல் வைத்து அது பொங்கி வருகையில் பொங்கலோ பொங்கல் என்பார்கள். வீட்டு வாசலில் மாக்கோலம் போட்டு எரும்புகளின் வயிறை நிறைப்பார்கள்.
நவீன பொங்கல்
கம்ப்யூட்டர் காலத்தில் பொங்கல் பானையாவது, மாக்கோலமாவது. பொங்கல் அன்று ஸ்டிக்கர் கோலத்தை வாசலில் ஒட்டி, குளித்து புத்தாடை அணிந்து குக்கரில் பொங்கல் வைத்து அதை தாமே உண்டுவிட்டு, டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்க்கிறார்கள்.
கரும்பு
கரும்பை கடித்து மென்று தின்ற காலம் போய் தற்போது கரும்பை கத்தியால் வெட்டி சிறு துண்டுகளாக்கி சாப்பிடும் காலமாகிவிட்டது.
அக்கம்பக்கத்தினர்
பொங்கல் வைத்தால் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு கொடுப்பது வழக்கம். தற்போது தான் பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்றே தெரியாத நிலை உள்ளபோது எங்கே பொங்கல் கொடுப்பது.