2-வது கட்ட பிரசாரம்... பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை
சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி 2-வது கட்டமாக கன்னியாகுமரியில் நாளை பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார்.
சட்டசபை தேர்தலில் தமிழக தலைவர்களுடன் இணைந்து தேசிய தலைவர்களும் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி முதற்கட்டமாக நேற்று சென்னை மற்றும் ஓசூரில் நடந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக நாளை மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வந்து பிரசாரம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரி முருகன்குன்றம் அருகே உள்ள ஏழுசாட்டுபத்து மைதானத்தில் நாளை பிற்பகல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் 6 பாஜக வேட்பாளர்கள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் என மொத்தம் 17 வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறார். சுற்றுலா விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு மைதானத்தில் வந்திறங்கும் அவர் அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் புறப்பட்டு பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார். அங்கு பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசி விட்டு மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார்.
மோடி வருகையையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொதுக்கூட்ட மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்படுகிறது.