சட்டசபை தேர்தல்: வேதாரண்யத்தில் நரேந்திர மோடி இன்று பிரசாரம்
நாகப்பட்டினம்: பிரதமர் மோடி இன்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் மற்றும் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வேதரத்தினம் உள்ளிட்ட 18 வேட்பாளர்களை ஆதரித்து இன்று மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.
இதற்காக தேத்தாக்குடி பகுதியில் உள்ள சோதனை சாவடி எதிரே பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தையும், ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தையும் மத்திய மண்டல ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன் ஆய்வு செய்தார். மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஏ.ஐ.ஜி. ஸ்மித்சிந்தியும் பார்வையிட்டார்.
தஞ்சையிலிருந்து ஹெலிகாப்டர் வந்து இறங்கி ஒத்திகையும் பார்க்கப்பட்டது. மோடி வருகையையொட்டி வேதாரண்யத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாகை முதல் வேதாரண்யம் வரையிலான கடற்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் முத்துப்பேட்டை கடல் பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. கடல் பகுதியில் அந்நிய படகுகள் நடமாட்டம் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் வருகை குறித்து தெரிவிக்க மீனவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.