டெல்லியில் தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் மரணத்திற்கு மோடி அரசு தான் காரணம் : வேல்முருகன்
டெல்லியில் தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் மரணத்திற்கு மோடி அரசு தான் காரணம் என்று வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சென்னை : டெல்லியில் உயர் மருத்துவ கல்லூரிகளில் தொடர்ந்து தமிழக மாணவர்கள் மர்மமான முறையில் மரணமடைவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும், அதற்கு மோடி அரசு தான் காரணம் என்றும் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் யூசிஎஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் எம்டி படித்துவந்த திருப்பூரைச் சேர்ந்த தமிழக மாணவர் சரத்பிரபு தற்கொலை செய்துகொண்டதாக நேற்று செய்தி வெளியானது. மாணவரின் இந்த மரணத்தில் பல்வேறு விதமான சந்தேகங்கள் இருப்பதாக தெரிவிக்கபட்டு உள்ளது.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த மரணத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மாணவர் சரத்பிரபு மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தற்கொலை செய்ய வாய்ப்பில்லை
அந்த அறிக்கையில், யூசிஎம்எஸ் கல்லூரியில் படித்து வந்த மாணவர் சரத்பிரபு விடுதி அறையில் மரணமடைந்து கிடந்ததாக போலீஸார் தெரிவித்து உள்ளனர். ஆனால் இந்த விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, சரத் பிரபு இன்சுலின் மருந்தை அளவுக்கதிகமாக தன் உடம்பில் ஏற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக யூசிஎம்எஸ் நிர்வாகம் கூறியது. இப்படிக் கூறியது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மாணவர் தற்கொலை செய்து கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்று அவரது பெற்றோரும் தெரிவித்து உள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்
இந்நிலையில் சக மருத்துவ மாணவர்களோ, சரத் பிரபு கொல்லப்பட்டிருக்கலாம் என்பதோடு, குற்றவாளிகளைக் காப்பாற்றவே, சரத் பிரபு தற்கொலை செய்துகொண்டதாக திட்டமிட்டு பொய் கூறுகிறது யூசிஎம்எஸ் நிர்வாகம் என்கின்றனர். 2016ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் சரவணனும் இப்படித்தான் மர்மமான முறையில் மரணமடைந்தார். ஆனால் அவர் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் தெரியவந்தது. அதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர் மரணங்களால் அதிர்ச்சி
அண்மையில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்துவந்த நெல்லை கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் தற்கொலைக்கு முயன்றார் என்று செய்தி வந்தது. இதற்கு சாதிய ஒடுக்குமுறை காரணம் என்று தெரியவந்தது. இப்படி தொடர்ந்து உயர் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் மரணமடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிவைக்கப்படும் தமிழக மாணவர்கள்
இப்படி தமிழக மாணவர்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது, தமிழக மாணவர்கள் உயர்கல்வி கற்பதை மோடி அரசு விரும்பவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. அதனால்தான் நீட் போன்ற மோசடித் தேர்வுகளால் அவர்கள் உயர்கல்வியில் சேர தடை செய்யப்படுகிறார்கள்; அதோடு தலைநகர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் உயர்கல்வி நிலையங்களிலேயே கொலை செய்யப்படுகிறார்கள். இந்த மரணங்களுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
ஒரு கோடி ரூபாய் நிதி உதவி
மாணவர் சரத்பிரபுவின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்கவும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு இடுமாறு மோடி அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. தமிழ அரசு இதில் தலையிட்டு சரத் பிரபுவின் மரணத்திற்கு நீதி பெற்றுத்தரவும் இழப்பீட்டை உறுதி செய்யவும் கேட்டுக்கொள்கிறோம். இதுபோல் சம்பவங்கள் இனி நடக்காதவாறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமிழக அரசை வலியுறுத்துவதாக வேல்முருகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.