நேரு பெயரை மறைக்க பட்டேலை பெரியதாக்கும் ஆர்.எஸ்.எஸ், மோடி சர்க்கார்: கி.வீரமணி சாடல்
சென்னை: பண்டித ஜஹவர்லால் நேருவின் பெயரை மறைப்பதற்காக சர்தார் பட்டேலை பெரிதாக்கிக் காட்டும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜஹவர்லால் நேருவின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலங்களின் கூட்டமைப்புதான் இந்தியா (Union of State). ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய தத்துவங்களைக் குறிக்கோளாகக் கொண்ட முழு உரிமை (இறையாண்மை) உள்ள ஜனநாயகக் குடி அரசாகத் திகழ்வதற்கு மூலகாரணம், 1947க்கு முன்பிருந்தே சிறந்த முற்போக்காளராகத் திகழ்ந்த ஜவகர்லால் நேருவும், அவரின் ஆட்சித் திறனும், தலைமையுமே ஆகும்.
நேருவின் பல்வேறு கொள்கை, அணுகுமுறைகளில் மாறுபடும் நம் போன்றவர்களுக்கும்கூட, நேருவின் தலைமை அத்தருணத்தில் கிடைத்திருக்காவிட்டால், இந்நாட்டில் மதச் சார்பின்மை இருந்திருக்காது என்ற கருத்தில் மாறுபாடு கிடையாது. சம தர்மத்தில் நம்பிக்கை உடைய, அறிவியல் மனப்பான்மை நாட்டில் பரவலாக ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய புதுமைச் சித்தர் அவர்.

நேருவின் அடித்தளம் காரணம்
மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்த சிறந்த ஜனநாயக வாதி, அவருக்குப்பின் எத்தனையோ சோதனைகள், அறைகூவல்களுக்குப் பின்னரும், இந்திய ஜனநாயகத்தில் பல்வேறு குறைகள் இருந்தபோதிலும், நிலைத்திருப்பதற்கு அவர் இட்ட அடித்தளமே காரணம். நாட்டில் ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் அணைகள், அறிவியல் சாதனங்கள், அறிவியல் கல்வி, பெண் கல்வி இவற்றிற்குத் தம் ஆட்சியில் முன்னுரிமை அளித்தார் நேரு.

சமூக நீதிப் பார்வை
சமூக நீதிப் பிரச்னையில், சட்டச் சிக்கல், ஏற்பட்டபோது வகுப்புவாரி உரிமைகள் செல்லாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தந்தை பெரியாரின் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தை நேருவே டாக்டர் அம்பேத்கரின் அரிய துணையோடு, நிறைவேற்றி சமூகநீதிக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்தார்.

வெளியுறவுக் கொள்கை
வெளியுறவுக் கொள்கையில் கோஷ்டி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தார்; பொதுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

தனியார் துறை
தனியார் துறை இருந்தது என்றாலும், எல்லாவற்றையும் அதில் கொண்டு சேர்க்க முனையவில்லை; நரசிம்மராவ், மன்மோகன்சிங் , வாஜ்பாய், மோடி அனைவரும் அவற்றை தலைகீழாக மாற்றும் புதிய பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தி, நாட்டை திசை திருப்பி வருகின்றனர்.

ஆப்பிரிக்கா மாதிரிதான் இருந்திருக்கும்..
மதச் சார்பின்மை (செக்யூலர்) என்பதை உளப்பூர்வமாக மதித்தவர் அன்றைய பிரதமர் நேரு. அவரில்லையேல் இந்தியா சில ஆப்பிரிக்க நாடுகள் போலத்தான் இருந்திருக்கும். ஜாதி, மத மூடநம்பிக்கை, மதவெறி, பெண்ணடிமை இவைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தயங்காத மிகப் பெரிய பகுத்தறிவுவாதி அவர்.

ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான மோடி அரசு
அவரது பெயரைத் திட்டமிட்டு மறைக்கும் நோக்கோடு சர்தார் பட்டேலைப் பெரிதாக்கிக் காட்டும் வேலையில் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான பிரதமர் மோடி அரசு இறங்கியுள்ளது.

புதுயுக சிற்பி
நேருவை ஒரு கட்சித் தலைவராகப் பார்க்காமல், புதுயுகத்தின் சிற்பியாக, அறிவியல் மனப்பான்மைக்கு வழி வகுத்தவராக, பல ஆண்டுகள் சிறையில் வதிந்து, நல்ல இலக்கியங்களைத் தந்த எழுத்தாளராகப் பார்த்து அவரது 125ஆவது பிறந்த நாளாகிய இன்று அவர்தம் புத்தாக்கச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்வது, மிகவும் இன்றியமையாதது.
இவ்வாறு கி. வீரமணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications