தமிழகத்திற்கு ஓரவஞ்சனை... விவசாயிகளை மோடி அழிக்கப்பார்க்கிறார் - இயக்குநர் கவுதமன்
பிரதமர் மோடி தமிழகத்தை அழிக்கப் பார்க்கிறார் என்றும், தமிழர்களுக்கு ஓரவஞ்சனை செய்வதாகவும் இயக்குநர் கவுதமன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழக விவசாயிகளை மட்டுமல்லாது, தமிழகத்தையை பிரதமர் மோடி அழிக்கப் பார்ப்பதாக இயக்குநர் கவுதமன் குற்றம் சாட்டியுள்ளார். 350 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இயக்குநர் கவுதமன் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் 30 நாட்களாக போரடி வருகின்றனர். தமிழரின் உரிமையை நிலை நாட்டுவதற்காக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க பிரதமர் மோடி தயாராக இல்லை என்பது தமிழார்களின் குற்றச்சாட்டு.
இதனையடுத்து இன்று மாணவர் அமைப்பினர் சென்னை கிண்டி கத்திப்பாரா பாலத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தை நடத்தினர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அலுவலகம் செல்பவர்களும், விமான நிலையம் செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர். போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கவுதமன், பிரதமர் மோடி தமிழக விவசாயிகளையும், தமிழகத்தையும் அழிக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் 350 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். தமிழக விவசாயிகள் 30 நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களை சந்திக்க மறுத்து பிரதமர் மோடி பாராமுகம் காட்டி வருகிறார்.
நடிகர்கள், நடிகையர்களை சந்திக்கும் மோடி நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்காமல் நாங்கள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.