சென்னை வந்தார் மோடி - பாஜகவினர் சிறப்பான வரவேற்பு
சென்னை: பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி இன்று வருகை தந்தார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி நானி பல்கிவாலா அறக்கட்டளை விழாவில் கலந்து கொள்ள இன்று மாலை 3.15 மணி அளவில் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பாஜக நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்தும் செங்கோல் கொடுத்தும் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து மோடி பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்றார். அங்கு கட்சி தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடக்கும் நானி பல்கிவாலா அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
இந்த விழாவில் பத்திரிக்கையாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி எழுதிய 'சுய துரோகம் - இந்தியாவின் சீனக் கொள்கைகள்' என்ற நூலை அவர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சோ. ராமசாமி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பின்னர் மோடி தனி விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை மோடி சந்திப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை.

மோடியின் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரில் ஆங்காங்கே வாகனச் சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் நகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜுகளில் சந்தேத்திற்கு இடமாக யாரேனும் தங்கியுள்ளார்களா என்றும் போலீசார் சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications