அப்பா மோடி வந்திருக்காங்க.. ஸ்டாலின் மகிழ்ச்சி.. கருணாநிதி நெகிழ்ச்சி!
கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி பேசியதைக் கண்டு கோபாலபுரம் வீட்டில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.
Recommended Video
சென்னை: அப்பா உங்களைப் பார்க்க பிரதமர் மோடி வந்திருக்காங்க என்று கருணாநிதியிடம் கூறினார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின். அதைக் கேட்டு உற்சாகத்துடன் சிரித்தார் கருணாநிதி.
சென்னை வந்த பிரதமர் மோடி இன்று கோபாலபுரத்திற்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் உடன் சென்றார்.
மத்திய பாதுகாப்பு படை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சென்றார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கருணாநிதியின் வீட்டிற்குச் சென்றனர். இந்த சந்திப்பின் போது திமுகவினரும் கோபாலபுரத்தில் இருந்தவர்களும் உற்சாகத்துடனே காணப்பட்டனர்.
ஸ்டாலின் சிவப்பு... கனிமொழி பச்சை
கோபாலபுரம் வந்த மோடிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் ஸ்டாலின். அப்போது கனிமொழி எம்.பி பச்சை நிற சால்வை கொடுத்து வரவேற்றார்.
நெகிழ்ச்சியான சந்திப்பு
மோடி நேராக சென்று கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு பேசினார். இந்த சந்திப்பு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. பாஜகவையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலும் அரசியலில் மூத்த தலைவரை வாஞ்சையுடன் சந்தித்து நலம் விசாரித்தார் மோடி.
விளக்கிய ஸ்டாலின்
அப்பா பிரதமர் மோடி வந்திருக்கிறார், கவர்னர் வந்திருக்கிறார், பாஜக தலைவர் தமிழிசை வந்திருக்கிறார் என்று ஒவ்வொருவராக பெயரை கூறி கருணாநிதியிடம் விளக்க அதை கேட்டு சிரித்தார் கருணாநிதி. அப்போது அருகில் ராஜாத்தி அம்மாள் நின்றிருந்தார். கருணாநிதியின் உடல் நலம் பற்றி மோடி கேட்டறிந்தார்.
நலம் விசாரித்த மோடி
வீட்டில் இருந்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை தனியாக சந்தித்து தமிழிசை, மோடி ஆகியோர் நலம் விசாரித்தனர். அப்போது அனைவரையும் வரவேற்றார் தயாளு அம்மாள். அவரது உடல் நலம் பற்றியும் கேட்டறிந்தார்.
பிரதமரான பின் முதல் வருகை
சென்னைக்கு பலமுறை வந்திருந்தாலும், முதன் முறையாக கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்துள்ளார் பிரதமர் மோடி. இம்முறை பயணத்திட்டத்தில் இல்லாத இந்த சந்திப்பு சில நிமிடங்கள்தான் என்றாலும் தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி அதிக உற்சாகத்துடன் காணப்பட்டார்.
அதிர்வை ஏற்படுத்திய கோபாலபுரம் விசிட்
முரசொலி பவளவிழாவிற்கு பிரதமர் மோடிக்கோ, பாஜகவிற்கோ எந்த வித அழைப்பும் அனுப்பவில்லை. ஆனாலும் இன்று வந்த மோடிக்கு முரசொலி பவளவிழா புத்தகத்தை அளித்தார் கருணாநிதி. அரைநாள் பயணம் என்றாலும் சென்னையில் புதிய அதிர்வை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளார் மோடி. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் அரசியல் நோக்கம் நிச்சயம் உண்டு என்றே கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.