காங்கிரஸ் தூக்கி எறியப்படும்; மோடி பிரதமராவது உறுதி: வைகோ
நெல்லை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தூக்கி எறியப்படும். பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி நாட்டின் பிரதமர் ஆவது உறுதி என்று வைகோ கூறியுள்ளார்.
நெல்லை அருகே கங்கை கொண்டானை சேர்ந்த மதிமுக பொதுக்குழு உறுப்பினர் காசிபாண்டியன் - கோமதி தம்பதியினரின் மகள் சண்முகநாதன் - பால்மாரி திருமணம் சங்கர்நகரில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட துணைச்செயலாளர் மின்னல் முகமதுஅலி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். விழா நிகழ்ச்சிகளை மாணவரணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதர்ன் திருமலைக்குமார், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் குட்டி என்ற சண்முக சிவசிதம்பரம், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கேஎம்ஏ நிஜாம், விவசாய அணி துணைச் செயலாளர் கல்லத்தியான், வக்கீல் அமல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் திவான், சண்முகவேல், முன்னாள் நீதிபதி டேவிட் கிறிஸ்டியன், டாக்டர் பூவலிங்கம், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திரும ணத்தை நடத்தி வைத்து கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
காங்கிரஸ் தூக்கி எறியப்படும்
நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் மகத்தான மாற்றம் ஏற்படும். தமிழ் ஈழம், தமிழ்மொழி, தமிழக வாழ்வாதாரம் மற்றும் தமிழக எதிர்கால நலனை நிர்ணயிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையும். காங்கிரசை தூக்கி எறியும் தேர்தலாக இத்தேர்தல் இருக்கும்.
மோடிதான் பிரதமர்
அப்படியென்றால் யார் பிரதமர் என்ற கேள்வி உங்களிடம் எழலாம். குஜராத்தில் தொடர்ந்து மூன்றுமுறை முதல்வராக இருந்து காந்தி பிறந்த அந்த மண்ணில் பிறந்து மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தி இப்போது அங்கே இஸ்லாமிய, கிறிஸ்துவ சமுதாயத்தினரும் அமைதியாக வாழ்ந்துவரும் வகையில் ஆட்சிபுரிந்துவரும் முதல்வர் மோடி இந்தியாவின் பிரதமர் ஆவார். இதை நான் ஆரூடமாக சொல்லவில்லை. நடக்கப்போவதை உண்மையாக சொல்கிறேன்.
நாடுமுழுவதும் மோடி அலை
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. காங்கிரஸ் தூக்கியெறியப்படும். கார்கில் போரில் நாட்டுக்காக யுத்தம் செய்த ராணுவ வீரர்களுக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் வீடுகள் ஒதுக்கீட்டில் மகாராஷ்டிரா முதல்வர் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளார். சிபிஐ அறிக்கை கொடுத்த பின்னரும் நடவடிக்கை இல்லை.
இழிவாக பேசுவதா?
மோடி பிரதமராவது குறித்து மிக மோசமாக காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர். அவருக்கு டீக்கடை வைத்துத் தருகிறோம் என்று கூறுகின்றனர். டீக்கடை நடத்துவதை இழிவான தொழிலாக கருதுகிறீர்களா? டீக்கடைக் காரர் பிரதமராக கூடாதா?
ஜனநாயக யுத்தம்
கம்யூனிஸ்ட் காரர்களுக்கு தேர்தல் பிரசாரத்தின் போது பதிலடி தருவேன். நாடாளுமன்ற தேர்தல் என்ற ஜனநாயக யுத்தத்திற்கு செல்லும் முன் எனது சொந்த மாவட்டமான நெல்லை மாவட்ட மக்களிடம் ஆசி பெற வந்திருக்கிறேன் என்றார் வைகோ.
தோரோட்டும் வைகோ
திருமணவிழாவிற்கு வந்த வைகோவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பலகையில், குருஷேத்திர மகாபாரத்போரில் அர்ஜூனனுக்கு, கண்ணன் தேரோட்டும் காட்சியை பிரமாண்டமாக வைத்திருந்தனர். அதில் அர்ஜூனராக, பாரதிய ஜனதா கட்சியின்,பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியும், தேரோட்டி கண்ணனாக தலைவர் வைகோவையும் சித்தரித்திருந்தனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் இந்த விளம்பர பலகை திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கவர்ந்தது!