பாஜகவின் தேர்தல் பிரசாரம்.. கோவையில் பிப். 2ல் தொடங்குகிறார் மோடி.. பொன். ராதா தகவல்
கோவை: கோவையில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலுக்கு முந்தைய பிரசாரத்தை கோவையில் பிப்ரவரி 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்க வைக்கிறார். இது தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் இங்கு நடைபெறும் கூட்டமானது சட்டசபைத் தேர்தலில் சிறந்த முடிவுகளை ஏற்படுத்தும். இந்தக் கூட்டத்தில் 10 லட்சம் பேர் அளவுக்கு கலந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு பிரமாண்டமான கூட்டமாக இது அமையும்.
தேர்தலுக்கு பாஜக தயாராகி விட்டது. ஏற்கனவே பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பூர்வாங்கப் பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். கூட்டணி குறித்து கேட்டால், எங்களது கூட்டணி சிறப்பாக உள்ளது. சில புதிய கட்சிகள் உள்ளே வரும் வாய்ப்புகளும் உள்ளன என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.