ஜெ.யின் 68வது பிறந்தநாள்... மோடி, ஆளுநர், சந்திரபாபு நாயுடு, தமிழிசை வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரோசைய்யா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் என ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதாவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தொலைபேசி வாயிலாக ஜெயலலிதாவிற்குத் தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்த மோடிக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார் ஜெயலலிதா.
Birthday wishes to Jayalalithaa ji. May Almighty bless her with a long life, filled with good health.
— Narendra Modi (@narendramodi) February 24, 2016
இது மட்டுமின்றி தனது டிவிட்டர் பக்கம் வாயிலாகவும் ஜெயலலிதாவிற்கு மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘ஜெயலலிதாஜிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரோசய்யா வாழ்த்து:
இதேபோல், ஆளுநர் ரோசய்யாவும் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக் கடிதமும், பூங்கொத்தும் அனுப்பி பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அவர் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துக் கடிதத்தில், ‘தங்களது பிறந்த நாளையொட்டி எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது உயரிய புத்தி கூர்மை, ஆளுமை திறன், திறமை மிகு ஆற்றல் மற்றும் மக்கள் மீதான அன்பு ஆகியவற்றால் தமிழ்நாடு மக்கள் நலத்திட்ட மாதிரி மாநிலமாக திகழ்கிறது. நீங்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன். உங்களது சேவையால் தமிழ்நாடு மிகவும் உயர்ந்த நிலையை அடையும்' என ரோசைய்யா தெரிவித்துள்ளார்.
தமிழிசை வாழ்த்து:
பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இன்று பிறந்தநாள் காணும் தமிழக முதல்வருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஒரு பெண் அரசியல்வாதியாக தான் பெற்ற அதிகாரம் அதிக பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 50 சதவீத உள்ளாட்சி அதிகாரத்தை பெண்களுக்கு வழங்கிய நிலையில் இந்த பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிப்பதில் மகிழ்கிறேன். உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு வாழ்த்து:
ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
இதேபோல், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் நிஜாமாபாத் நாடாராளுமன்ற உறுப்பினர் கல்வகுண்ட்ல கவிதா, சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதர் பிலிப் ஏ.மின் ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சரோஜாதேவி வாழ்த்து:
"துக்ளக்" வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி, நடிகை சரோஜா தேவி, "ஆற்காட் நவாப்" முகமது அப்துல் அலி ஆகியோர் முதல்வருக்கு பூங்கொத்தும், வாழ்த்துக் கடிதமும் அனுப்பி பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
மதுரை ஆதினம் வாழ்த்து:
இதே போல் மதுரை ஆதீனம், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், பசும்பொன் மக்கள் கழக தலைவர் ச.இசக்கிமுத்து உள்ளிட்ட பலரும் வாழ்த்து கடிதம் பூச்செண்டு கொடுத்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications