தென்னைக்கு வைக்கும் மருந்தை மருமகள் வாயில் திணித்துக் கொன்றேன்.. மாமியாரின் பரபர வாக்குமூலம்
போடிநாயக்கனூர்: எனது மருமகள் சீதனம் ஏதும் கொண்டு வராமல் வந்ததால் கோமடைந்து அவளைக் கொலை செய்தேன். அவளது வாயில் தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை எடுத்து கட்டாயப்படுத்திக் கொலை செய்தேன் என்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கைது செய்யப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் சதீஷ்குமார் (25). இவர் திருச்சியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்க்கும்போது, உடன் வேலை பார்த்த திருச்சி கீரனூர் அருகே உள்ள பொக்கிசகாரன்பட்டியைச்சேர்ந்த பூபதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு போடியில் உள்ள சதீஷ்குமாரின் வீட்டில் வசித்து கொண்டே கணவன், மனைவி இருவரும் தேனியில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை பூபதி வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பார்த்திபன் விசாரணை நடத்தினார். விசாரணையில் பூபதியின் மாமியார் சுலோச்சனாதான் இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரிடம் சுலோச்சனா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில்,
எனது வீட்டின் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மருமகள்கள் வரதட்சணையாக பணம், பொருட்கள் கொண்டு வந்த நிலையில் தனது மருமகள் மட்டும் சீதனமாக எதுவும் கொண்டு வரவில்லை என்று மிகுந்த ஆத்திரம் அடைந்தேன். இதனால் என்னுடைய மருமகளை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. இதை அடுத்து அதற்கான நேரத்திற்காக காத்திருந்தேன்.
சம்பவத்தன்று காலையில் சமையல் செய்யும்போது, கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக எனது மகனிடம் மருமகளை தனக்கு உதவியாக வீட்டில் விட்டு செல்லுமாறு கூறினேன். இதையடுத்து சதீஷ்குமார் மட்டும் வேலைக்கு சென்றான்.
அன்று மதிய நேரம் அருகில் யாரும் இல்லாதபோது தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரையை அள்ளி பூபதியின் வாயில் போட்டு திணித்தேன். மாத்திரையை நாக்கில் வைத்ததும், பூபதி மயங்கி விழுந்து இறந்து விட்டார் என்று கூறியுள்ளார் சுலோச்சனா.
பரிதாபத்துக்குரிய பூபதி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராம். மாமியாரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பூபதியின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.