நொடித்துப் போன லாரி உரிமையாளரிடம் ரூ. 75 லட்சம் மோசடி - எஸ்.பியிடம் புகார்
தூத்துக்குடி: 75லட்ச ரூபாய் பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி கடன் வாங்கியும், தொழில் நஷ்டத்தாலும் பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிராமலிங்கம். இவர் கடந்த 36 வருடங்களாக 9 லாரிகளை வைத்து சொந்தமாக டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக காசிராமலிங்கம் தனது லாரிகளை விற்றார்.
இந்தநேரத்தில், இவரை இவரது குடும்ப நண்பர்களான தூத்துக்குடி கீழ ரத வீதியில் தேவி சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வரும் சுப்பையா அவரது மகன்கள் பாலகுருசாமி, ராஜேஷ் ஆகியோர் அணுகினர். தங்களது சிட்பண்டில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம் என்று அவர்கள் ஆசைவார்த்தை கூறினர்.
இதனை உண்மையென நம்பிய காசிராமலிங்கம் லாரிகளை விற்றப் பணம் ரூ.75லட்சத்தை கடந்த 2009ம் ஆண்டு தேவி சிட்பண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தார். இதற்கான வட்டித்தொகை கடந்த 2013ம் ஆண்டு வரை சரியாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் வட்டித்தொகை எதுவும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து காசிராமலிங்கம் சீட்டு நிறுவனத்தினரிடம் கேட்டபோது அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் காசிராமலிங்கம் தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிட்பண்ட் நிறுவனத்தினர் காசிராமலிங்கத்தை குண்டர்கள் மூலமாக மிரட்டினர்.
மேலும், சிட்பண்ட் நிறுவனத்தினர் கொடுத்த 15க்கும் மேற்ப்பட்ட வங்கி காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் பாதிக்கப்பட்ட காசிராமலிங்கம் தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் தான் முதலீடு செய்த பணம் ரூ.75லட்சத்தை பெற்றுத்தரக்கோரி புகார் மனு கொடுத்தார்.
மேலும் பண மோசடி செய்தவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தனக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications