ஓட்டுக்குப் பணம் அதை விட மிகப் பெரிய தீமை!- கவிஞர் வைரமுத்து
கோவை: இருப்பதிலேயே குறைந்த தீமை கொண்ட ஆட்சி முறை ஜனநாயகம். அதில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது மிகப் பெரிய தீமை, என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் இயங்கும் ‘எழுத்து' தமிழ் இலக்கிய அமைப்பு சார்பில் கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியது:

இலக்கியவாதிகளின் எண்ணிக்கை குறைவதாக இங்கு சுட்டிக் காண்பித்தனர். உலோகத்தில் தங்கம் குறைவாக கிடைப்பதனால்தான் மதிப்பு மிகுந்து விளங்குகிறது. அதுபோல் இலக்கியவாதிகள். குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எப்போதும் போற்றப்படுவார்கள். 8 கோடி தமிழ் மக்களுக்காக எழுத்தாளர்கள் எழுதவில்லை. எதிர்கால சந்ததிகளான 800 கோடி மக்களுக்காகத்தான் எழுதுகிறார்கள். எனவேதான் எழுத்தாளர்கள் சோர்வடைவதில்லை.
தமிழ்பசி, இலக்கிய பசி நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். தமிழுக்கு விரோதபோக்கு தொழில்நுட்பத்திலும், உலகமயமாதலிலும், சந்தைப்பொருளாதாரத்திலும்தான் ஆரம்பிக்கிறது. மொழியின் பாரம்பரியத்தை உணர்ந்து எழுதினால்தான் சிறந்த எழுத்தாளராக முடியும்.
தொழிலாளி தொடர்பாக ஒருவர் எழுதிய கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு தொழிற்சாலையில் போனஸ் வழங்குவது தொடர்பாக போராட்டம் நடைபெறுகிறது. இறுதியில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அப்போது ஒரு தொழிலாளி மட்டும் போனஸ் வாங்க மறுக்கிறார். ‘நீங்கள் போடும் சில எலும்பு துண்டுகள்தான் இது. அதுவும் எங்கள் உடம்பில் இருந்து எடுக்கப்பட்டதுதானே?' என்று அந்த தொழிலாளி கேட்கிறார்.
இதுபோல்தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்துக்கு தீமையை விளைவிக்கும். ஜனநாயகம் தான் மற்ற ஆட்சிகளை விட குறைந்த தீமையை கொண்டது என்பார்கள். ஆனால் பெரிய தீமைக்கு அது வழிவகுத்து விடக்கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அறம் சார்ந்தவர்களும், அறிவு ஜீவிகளும் விரும்புவதில்லை," என்றார்.












Click it and Unblock the Notifications