சென்னையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை.. 4 நாட்கள் நீடிக்கும்!
வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளதால் சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை கொட்டி வருகிறது.
Recommended Video

சென்னை : வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் இன்று காலை முதலே மழை கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் நேற்று முன் தினம் பெய்த மழையால் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகள் மேலும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்கள் விடாமல் கொட்டித் தீர்த்த நிலையில் நேற்று ஒரு நாள் லீவு விட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே சென்னையில் வானம் மேகமட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 9 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சேப்பாக்கம், வடபழனி, கிண்டி, ஆலந்தூர், போரூர், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

மயிலாப்பூர் பகுதியில் மழை வெளு வெளு என்று வெளுத்து வாங்கியது. இதே போன்று சென்னையின் புறநகர்ப் பகுதிகள்ன கொரட்டூர், ஓட்டேரி மற்றும் புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடையும் என்றும் நவம்பர் 4ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதே போன்று தென்மேற்கு வங்கக்கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையமும் எச்சரித்துள்ளது. சென்னை முழுவதும் வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால் பகல் 1 மணி கூட காலை 6 மணி போலவே காட்சியளிக்கிறது.
காலை முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் விடாமல் பெய்து வரும் மழையால் மாலை 5 மணிக்கே நகரில் இருள் சூழ்ந்து விட்டது. மழையினால் மக்கள் பீதியடையாமல் போதுமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளோடு பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications